கடந்த 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு 'ஆர்டெமிஸ் III' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது. அந்தவகையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவில் விண்வெளி வீரர்கள் தரையிறங்குவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் 13 தரையிறங்கும் தளங்களை நாசா அடையாளம் கண்டுள்ளது.
ஆர்டெமிஸ் III திட்டத்தில் விண்வெளி வீராங்கனை இடம்பெற்றுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நிலவிற்கு செல்லும் முதல்
பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.
"அப்போலோவிற்கு பிறகு ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நிலவுக்கு சென்று குழு ஆராய்ச்சி மேற்கொள்ளும். இதுவரை மனிதர்கள் ஆராயப்படாத இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டத்தில், நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கான அடித்தளம் மேற்கொள்ளப்படும்" என்று ஆர்ட்டெமிஸ் திட்ட மேம்பாட்டுப் பிரிவின் துணை இணை நிர்வாகி மார்க் கிராசிச் கூறினார்.
நாசா தேர்வு செய்த 13 இடங்களின் பட்டியல்
Faustini Rim A
Peak Near Shackleton
Connecting Ridge
Connecting Ridge Extension
de Gerlache Rim 1
de Gerlache Rim 2
de Gerlache-Kocher Massif
Haworth
Malapert Massif
Leibnitz Beta Plateau
Nobile Rim 1
Nobile Rim 2
Amundsen Rim
தேர்வு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளும் சந்திரனின் தென் துருவத்தின் ஆறு டிகிரி அட்சரேகைக்குள் உள்ளன. (six degrees of latitude) மற்றும் பல்வேறு புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. அனைத்து பகுதிகளும் நிலவின் தென் துருவத்திற்கு அருகாமையில் இருப்பதால் விஞ்ஞான ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிரந்தரமாக நிழல் கொண்ட பகுதிகளாக உள்ளன. மேலும், மனிதர்களால் ஆராயப்படாத வளங்கள் நிறைந்த பகுதியாகும்.
இந்த 13 பகுதிகள் குறித்து அறிவியல், பொறியியல் வல்லுநர்களுடன் நாசா கலந்தாலோசனை மேற்கொள்ள உள்ளது. அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் கூடுதல் தகவல்களை பெற உள்ளது. கருத்துகளின் அடிப்படையில் மேலும் சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆர்ட்டெமிஸ் III பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தரையிறங்கும் தளம் தேர்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“