/indian-express-tamil/media/media_files/2025/10/16/stephen-hawking-2025-10-16-18-14-44.jpg)
2,600-க்குள் பூமி தீக்கோளமாக மாறும்: ஸ்டீபன் ஹாக்கிங் சொன்ன பூமியின் பயங்கர எதிர்காலம்!
உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், நமது பூமி ஒருநாள் "ஒரு மாபெரும் தீக்கோளமாக" (Giant Ball of Fire) மாறும் என்று திகிலூட்டும் கணிப்பை வெளியிட்டார். 2017-ம் ஆண்டு டென்சென்ட் WE உச்சி மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்தார். இதற்கு காரணமாக அவர் சுட்டிக்காட்டியது 2 விஷயங்கள்தான்: கட்டுப்பாடு இல்லாத மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் எரிசக்தி நுகர்வு.
தொழில்நுட்ப வளர்ச்சி சாபமா?
தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சி குறித்தும் ஹாக்கிங் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்தார். இந்த வேகத்தில் நாம் சென்றால், மனித குலம் மெதுவாக அழிவை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று அவர் அஞ்சினார். அறிவியல் அல்லது தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதிர்காலத்தில் குறையும் என்றோ அல்லது நிற்கும் என்றோ நான் பார்க்கவில்லை, என்று கூறிய அவர், தற்போதைய அசுர வேக வளர்ச்சி (Exponential Growth) அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நிச்சயம் நீடிக்காது என்றும் அறுதியிட்டுக் கூறினார்.
2600-க்குள் பூமிக்கு என்ன ஆகும்?
ஹாக்கிங்கின் கணிப்புப்படி, கி.பி. 2600-க்குள் நமது உலகின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். இதனால் ஏற்படும் உச்சபட்ச மின்சார நுகர்வு, பூமியை அப்படியே சிவந்துபோகச் செய்து, நெருப்புக் கோளம்போல் ஒளிரச் செய்யும். இது முற்றிலும் நீடிக்க முடியாத நிலை என அவர் ஆணித்தரமாகக் கூறினார். இந்த விகிதத்தில் மனிதர்கள் பெருகிக் கொண்டே போனால், அது அணு ஆயுதப் போர் போன்ற மாபெரும் பேரழிவுக்கு வழிவகுத்து, மனித இனத்தையே பூண்டோடு அழிக்கக்கூடும் என்றும் அந்த மாமேதை எச்சரித்தார்.
ஹாக்கிங் பட்டியலிட்ட மற்ற அச்சுறுத்தல்களில், சமீபத்திய பெருந்தொற்றுகள் (Pandemics), வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வேற்றுகிரகவாசிகள் படையெடுப்பு ஆகியவை அடங்கும். குறிப்பாக, உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் பற்றிப் பேசுவதும், மத்திய கிழக்கு மோதல்களும் நடக்கும் இக்காலகட்டத்தில், அணு ஆயுதப் போர் குறித்த ஹாக்கிங்கின் எச்சரிக்கை மிகவும் ஆழமானதாக உணரப்படுகிறது.
வேற்றுகிரகவாசிகள் குறித்த விவாதங்களின் போது, வானில் காணப்படும் யுஎஃப்ஓ-க்கள் (UFOs) உண்மையாகவே வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாம் என்றும் அவர் ஊகித்தார். பலர் நம்புவது போல, யு.எஃப்.ஓ-க்களில் வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம், அதை அரசாங்கம் மறைக்கலாம். என்னால் அதைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது என்று நகைச்சுவையுடனும் புதிராகவும் தன் கருத்தைப் பதிவு செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.