/tamil-ie/media/media_files/uploads/2022/12/International-Space-Station-soyuz-coolant-leak-20221216.jpg)
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி கடந்தாண்டு ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ் 22 (Soyuz MS-22) விண்கலம் மூலம் ஐ.எஸ்.எஸ்ஸிற்கு 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்க விண்வெளி வீரர் பிரான்சிஸ்கோ ரூபியோ, ரஷ்ய விண்வெளி வீரர்கள் செர்ஜி ப்ரோகோபியேவ், டிமிட்ரி பெட்லின் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் டிசம்பர் 14-ம் தேதி திடீரென விண்கலத்தில் கூலன்ட் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. கசிவு ஏற்பட்டதையடுத்து வீரர்களின் விண்வெளி நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கசிவு குறித்து நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விசாரணை செய்து வருகின்றனர். அங்குள்ள வீரர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், Soyuz MS-22 விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற 3 வீரர்கள் Soyuz MS-23 மாற்று விண்கலம் மூலம்
செப்டம்பர் 2023-இல் பூமிக்கு திரும்புவர் என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
MS-22 விண்கலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கசிவு மைக்ரோ மெட்டீராய்டால் ஏற்பட்டிருக்கும் என்று நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இருவரும் நம்புகின்றனர். விண்வெளிப் பாறையின் ஒரு சிறிய துகள் அதிக வேகத்தில் காப்ஸ்யூலைத் தாக்கி இருக்கும் என்று கூறுகின்றனர்.
இந்தநிலையில், கசிவு ஏற்பட்ட Soyuz MS-22 விண்கலம் வீரர்கள் இன்றி அடுத்த மாதம் பூமிக்கு கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. மேலும் Soyuz MS-23 மாற்று விண்கலம் வெள்ளிக்கிழமை தானியங்கி முறையில் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.எஸ்ஸில் நிலைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.