/indian-express-tamil/media/media_files/2025/09/20/solar-eclipse-2025-2025-09-20-16-44-38.jpg)
2025-ன் கடைசி சூரிய கிரகணம்: நாளை இரவு நடக்கும் அரிய வானியல் நிகழ்வு!
2025-ம் ஆண்டு முடியும் நிலையில், வானத்தில் ஒரு அரிய நிகழ்வு காத்திருக்கிறது. செப்.21-ம் தேதி நாளை நிலவு சூரியனுக்கு முன்னால் வந்து ஒரு பகுதி சூரிய கிரகணத்தை (Partial Solar Eclipse) உருவாக்கும். அப்போது சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு, வானியல் ஆர்வலர்களுக்கு அரிய காட்சியை வழங்க உள்ளது.
பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கிறது. முழு சூரிய கிரகணத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்படும். ஆனால், இந்த முறை ஒரு பகுதி கிரகணம் என்பதால், சூரியனின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனால் மறைக்கப்படும். இந்த கிரகணம் உச்சத்தை அடையும்போது, 85% வரை சூரியன் மறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் பார்க்க முடியுமா?
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்வு தெரியாது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி செப்டம்பர் 21 அன்று இரவு 10:59 மணிக்குத் தொடங்கி, செப்.22 அதிகாலை 1:11 மணிக்கு உச்சத்தை அடைந்து, அதிகாலை 3:23 மணிக்கு முடிவடைகிறது. இந்தக் காலக்கட்டத்தில், இந்தியாவில் சூரியன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால், இந்த நிகழ்வைக் காண முடியாது.
எங்கே பார்க்கலாம்?
இந்த அரிய நிகழ்வு பூமியின் தென் அரைக்கோளப் பகுதிகளில் மட்டுமே தெரியும். குறிப்பாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பல பசிபிக் தீவுகள், மற்றும் அண்டார்டிகா போன்ற இடங்களில் இந்த கிரகணத்தைக் காணலாம். ஆஸ்திரேலியாவில், சிட்னி, கான்பெரா போன்ற நகரங்களில் காணலாம். நியூசிலாந்தில், ஆக்லாந்து, வெலிங்டன் போன்ற நகரங்களில் தெரியும். பசிபிக் தீவுகளான ஃபிஜி, சமோவா, டோங்கா, மற்றும் வனுவாட்டு ஆகிய இடங்களிலும் இந்தக் கிரகணம் தெரியும். அண்டார்டிகாவில் உள்ள சில ஆய்வு நிலையங்களில் கூட இந்த நிகழ்வைக் காண முடியும். தெற்கு நியூசிலாந்தில் சூரியனின் 86% பகுதி மறைக்கப்படும். இதுதான் இந்த கிரகணத்தின் உச்சக்கட்ட நிகழ்வாக இருக்கும். அண்டார்டிகாவில், இந்த கிரகணம் அதிக நேரம் நீடிக்கும்.
2025-ன் கடைசி கிரகணம்
செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழும் இந்த பகுதி சூரிய கிரகணம், 2025-ம் ஆண்டின் கடைசி கிரகணம் ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பகுதி சூரிய கிரகணமும், தொடர்ந்து செப்டம்பரில் 2 முழு சந்திர கிரகணங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, தென் அரைக்கோளப் பகுதி மக்களுக்கு இந்த நிகழ்வு, சூரியன் மற்றும் சந்திரனின் அரிய கோள் நகர்வுகளைக் காணும் கடைசி வாய்ப்பாக அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.