/indian-express-tamil/media/media_files/2025/10/27/sun-corona-2025-10-27-10-22-23.jpg)
சூரியனின் 'கோடி டிகிரி' வெப்பம்: மர்மம் உடைந்தது! விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்!
பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளைத் திணறடித்து வந்த மிகப்பெரிய விண்வெளிப் புதிர் இப்போது அவிழ்ந்திருக்கிறது. அது என்னவென்றால்: நமது சூரியனின் மேற்பரப்பு வெறும் 5,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்தான் இருக்கிறது. ஆனால், அதன் வெளிப்புற அடுக்கான 'கரோனா' (Corona), ஒரு மில்லியன் டிகிரிக்கும் அதிகமாக (10 லட்சத்திற்கும் மேல்) எப்படிச் சூடாக இருக்கிறது? இந்த உச்ச வெப்பநிலைக்குக் காரணம், சூரியனின் காந்த அலைகள்தான் என்பதை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியன் மேற்பரப்பில் இருந்து சக்திவாய்ந்த ஆற்றல் மேல்நோக்கி எடுத்துச் செல்லப்பட்டால்தான் கரோனா இவ்வளவு சூடாக இருக்க முடியும். அந்த ஆற்றலைக் கடத்திச் செல்வது எதுவென்று நீண்டகாலமாகச் சந்தேகம் இருந்தது. நோபல் பரிசு பெற்ற ஹேன்ஸ் ஆல்ஃப்வென் பெயரால் அழைக்கப்படும் "ஆல்ஃப்வென் அலைகள்தான்" காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால், சிறிய அளவிலான இந்த அலைகளைச் சூரியனின் பிரகாசமான ஒளியில் நேரடியாகக் கண்டுபிடிப்பது மிகச் சவாலாக இருந்தது.
வட அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் ரிச்சர்ட் மோர்டன் தலைமையிலான விஞ்ஞானிகள், ஹவாயில் உள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கியான டேனியல் கே. இனோயே சூரிய தொலைநோக்கியைப் (DKIST) பயன்படுத்தினார்கள். இந்தத் தொலைநோக்கி, கரோனாவில் உள்ள மிக நுணுக்கமான விஷயங்களைக் கண்டறியும் திறன் கொண்டது.
டி.கே.ஐ.எஸ்.டி-யின் தரவுகளை ஆராய்ந்தபோது, சூரியனின் காந்தக் கோடுகள் முறுக்குவதையும், முன்னும் பின்னுமாக அலைவதையும் விஞ்ஞானிகள் கவனித்தனர். இது ஒரு கண்ணுக்குத் தெரியாத நடனம் போல இருந்தது. விஞ்ஞானிகள் கரோனாவில் கண்டறிந்த இந்த அலைகளுக்கு "டார்ஷனல் ஆல்ஃப்வென் அலைகள்" (Torsional Alfvén Waves) என பெயரிட்டுள்ளனர். இந்த அலைகளின் முறுக்கு வேகம் வினாடிக்கு சுமார் 19.5 கிலோமீட்டர் ஆகும். இந்த முறுக்கு இயக்கம்தான், சூரியனின் காந்த ஆற்றலைச் சேகரித்து, அதை வெப்பமாக மாற்றி கரோனாவிற்குள் செலுத்திக்கொண்டிருக்கிறது. இந்த அலைகள் அமைதியான கரோனா பகுதிகள் உட்பட சூரியன் முழுவதும் நிரந்தரமாகச் செயல்படுவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.
இந்த அலைகள் கடத்தும் ஆற்றல், கரோனாவைச் சூடாக்குவதற்கும், விண்வெளியில் பாயும் "சூரியக் காற்று" (Solar Wind) எனப்படும் துகள்களின் வேகத்தை அதிகரிப்பதற்கும் போதுமானதை விட அதிகமாக உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு வெறும் அறிவியல் ஆர்வம் மட்டுமல்ல, நடைமுறைப் பயனும் கொண்டது. சூரியக் காற்று தீவிரமடையும் போது, அது பூமியில் உள்ள செயற்கைக்கோள்களைப் பாதிக்கலாம், ஜி.பி.எஸ். சேவைகளில் குறுக்கிடலாம், ஏன் சிலசமயம் மின் விநியோகக் கட்டமைப்புகளையும் செயலிழக்கச் செய்யலாம்.
இந்த ஆல்ஃப்வென் அலைகள் எப்படி ஆற்றலை வெளியேற்றுகின்றன என்பதைப் புரிந்துகொண்டால், சூரியக் காற்றின் தீவிரத்தை இனி மிகத் துல்லியமாக முன்கூட்டியே கணிக்க முடியும். இதன்மூலம், பூமியில் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க முடியும். இந்த நேரடிக் கண்காணிப்பின் மூலம், விஞ்ஞானிகள் இப்போது தங்கள் கணினி மாதிரிகளையும் சமன்பாடுகளையும் சூரியனில் உண்மையில் நடப்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us