உலகத்தில் எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விண்வெளி, கடல், நிலம் என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பழங்காலத்தில் இருந்தே கடல் வழி பயணம், தேடல், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடலும் பல ஆச்சரியங்களை மனிதருக்கு கொடுத்து வருகிறது. கடலில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள், அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. கடல் பற்றிய ஆராய்ச்சி, படிப்பு கற்பிக்கப்பட்டுகிறது.
அந்தவகையில், அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில் சீரான துளைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) அட்லாண்டிக் கடலின் ஆழத்தில் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக அட்லாண்டிக் ரிட்ஜ் என்ற பகுதிக்கு அருகில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 23) போர்ச்சுகலின் பிரதான நிலப்பகுதிக்கு அருகில், வடக்கு அசோர்ஸின் பகுதியில் ஆராய்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, 1.6 மைல் தூரம் ஆழத்தில், கடல் தரைப்பரப்பில் மணலில் துளைகள் சீராகவும், ஒரே நேர்க்கோட்டிலும் அமைந்திருப்பதை கண்டுபிடித்தனர். நிறைய துளைகள் இதுபோன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
வியாழக்கிழமையன்றும் மேலும் நான்கு செட் துளைகளை கண்டுபிடித்தனர். இந்த துளைகள் 1 மைல் தூர ஆழத்திலும், முன்பு கண்டுபிடிக்கப்பட்ட துளை பகுதியிலிருந்து 300 மைல் தொலைவிலும் இருந்துள்ளன. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இது எப்படி, எதனால் உருவாகிறது எனத் தெரியவில்லை. ஆனால் முன்பே இது போன்ற அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தனர்.
இதை ஜெர்மன் "லெபன்ஸ்புரென்", "வாழ்க்கை தடயங்கள்" எனக் கருதுகிறது. வண்டல் குவியங்களில் உயிரினங்கள் செய்ததாக கூட இருக்கலாம் எனக் குறிக்கின்றனர்.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இதுகுறித்து பேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்களிடையே கருத்து கேட்டு வருகிறது. அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எமிலி க்ரம் கூறுகையில், "துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அவற்றைச் சுற்றியுள்ள சிறிய வண்டல் குவியல்கள் அவை ஏதோவொன்றால் தோண்டப்பட்டதாக தெரிகிறது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடத்தில் இருந்து சுமார் 27 மைல் தூரத்தில் இதேபோன்ற துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்" என அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போது வரை தெளிவான காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஆழ்கடல் உயிரியலாளர் மைக்கேல் வெச்சியோன் கூறினார். "முக்கியமான ஏதோ ஒன்றாகத் தெரிகிறது. ஆனால் அது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. மர்மமாக உள்ளது " எனத் தெரிவித்தார்.