உலக நாடுகள் பலவும் விண்வெளி குறித்த ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்த ராக்கெட் பயன்படுத்துகின்றன. செயற்கைகோள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும்.
புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ராக்கெட் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உடைந்து பூமிக்கு வரும். அந்த வகையில் சமீபத்தில் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்றின் உதிரி பாகங்கள் பூமியில் விழ இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்தனர். இந்திய பெருங்கடல் பகுதியில் விழ இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அந்தவகையில் நேற்று இந்திய பெருங்கடல் பகுதியில் திடீரென வானில் சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களில் வெளிச்சம் தென்பட்டதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். விண்கற்கள் விழுகிறது எனப் பொதுமக்கள் கூறிய நிலையில் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.
சீனா ராக்கெட் Long March 5B (CZ-5B) உதிரி பாகங்கள் இந்திய பெருங்கடலில் நேற்று காலை 10.45 மணியளவில் நுழைந்ததை அமெரிக்கா உறுதி செய்தது. ராக்கெட் பாகங்கள் விழும் இடம் மற்றும் சிதைந்து செல்லும் இடம் ஆகியவை குறித்து சீனா கூற வேண்டும் எனவும் அமெரிக்கா விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆயிரக்கணக்கானோர் இதைக் கண்டு புகைப்படம் எடுத்தனர்.
அமெரிக்கா சாடல்
நாசா விண்வெளி அமைப்பு நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், "ராக்கெட் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைவது குறித்த தகவலை சீனா முறையாக தெரிவிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் இதுபோன்ற தகவல்களை முன்கூட்டிய பகிர்ந்து சிறந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
அப்போதுதான் அதன் அபாயம் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியும். குறிப்பாக Long March 5B போன்ற பெரிய ராக்கெட்டுக்கள் பூமிக்கு திரும்புவது உன்னிப்பாக கண்காணிக்கக வேண்டும். இப்படி செய்வதுதான் விண்வெளியின் பொறுப்பான பயன்பாட்டிற்கும், பூமியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.