/indian-express-tamil/media/media_files/2025/09/06/blood-moon-2-2025-09-06-12-01-05.jpg)
2025-ன் பிரமாண்டமான 'ரத்த நிலா': இந்தியாவில் எப்போது, எங்கே பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?
செப்.7 இரவு, ஓர் அரிதான முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது 'ரத்த நிலா' (Blood Moon) என்றும் அழைக்கப்படுகிறது. 'சந்திர கிரஹண் 2025' என அழைக்கப்படும் இந்நிகழ்வு, இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாகத் தெரியும். இந்தியாவில் இந்த முழு சந்திர கிரகணத்தின் மொத்த காலம் சுமார் 82 நிமிடங்கள் ஆகும். இது, இந்தத் தசாப்தத்தின் மிக நீண்ட கிரகணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சந்திர கிரகணம் 2025: இந்தியாவில் நேரம் & தேதி
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அறிவிப்பின்படி, இந்தச் சந்திர கிரகணம் செப்.7 ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி, செப்டம்பர் 8, திங்கட்கிழமை அதிகாலை வரை நீடிக்கும்.
கிரகணம் தொடக்கம்: செப்டம்பர் 7, இரவு 8:58 PM IST
முழு சந்திர கிரகணம்: செப்டம்பர் 7, இரவு 11:00 PM IST
கிரகணத்தின் உச்சம்: செப்டம்பர் 7, இரவு 11:42 PM IST
முழு கிரகணம் முடிவடைதல்: செப்.8, அதிகாலை 12:22 AM IST
இந்தியாவில் சந்திர கிரகணம் 2025 தெரியும் இடங்கள்
2025 செப்டம்பரில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, லக்னோ, பாட்னா, ஜெய்ப்பூர் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் தெரியும். கிரகணத்தின் அனைத்து நிலைகளையும் பொதுமக்கள் தெளிவாகக் காண முடியும்.
கிரகணத்தைக் காண, பொதுமக்கள் திறந்தவெளிகள், மொட்டை மாடிகள், மாடிகள் அல்லது பூங்காக்களைத் தேர்வு செய்யலாம். சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை எந்தவிதக் கண்ணாடிப் பாதுகாப்புமின்றிப் பார்ப்பது பாதுகாப்பானது. கிரகணத்தின்போது, சந்திரனின் மேற்பரப்பை இன்னும் தெளிவாகவும் நெருக்கமாகவும் பார்க்க பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம்.
பிளட் மூன் - மதுரையில் கண்டுரசிக்க ஏற்பாடு
இந்த அரிய வானியல் நிகழ்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களை அறிவியல் கற்க ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) சார்பாக பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள பொதுமக்கள் காண முடியும். வைகை ஆற்றின் குறுக்கே உள்ள தைக்கால்-செல்லூர் பாலத்தில், பொதுமக்கள் தொலைநோக்கிகள் மற்றும் பைனாகுலர்கள் மூலம் இந்த கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளட் மூன் என்றால் என்ன?
முழு சந்திர கிரகணத்தின்போது, பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேராக வரும். அப்போது சந்திரன் முழுமையாக இருட்டாகத் தெரிவதற்குப் பதிலாக, ஆழமான சிவப்பு நிறமாக மாறும். இதுவே 'ரத்த நிலா' (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியைத் வடிகட்டுவதால்தான் இது நிகழ்கிறது. 'ரேலே ஸ்கேட்டரிங்' (Rayleigh scattering) எனப்படும் இந்த நிகழ்வில், நீல நிற ஒளி சிதறடிக்கப்படுகிறது, ஆனால் சிவப்பு ஒளி வளிமண்டலம் வழியாகச் சென்று சந்திரனை ஒளிரச் செய்கிறது. நீண்ட நேரம் நீடிப்பதால், 2025 செப்டம்பர் மாதம் நிகழும் இந்த ரத்த நிலா தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
செப்.2025 சந்திர கிரகணம் எவ்வளவு அரிதானது?
இந்தச் செப்டம்பர் 2025 முழு சந்திர கிரகணம் அதன் கால அளவு மற்றும் தெரிவுநிலை காரணமாக அரிதானதாகக் கருதப்படுகிறது. இது 2022-ம் ஆண்டுக்குப் பிறகு நிகழும் மிக நீண்ட முழு சந்திர கிரகணமாகும். உலக மக்கள் தொகையில் சுமார் 88% பேர், இந்தக் கிரகணத்தின் ஒரு பகுதியையாவது காண முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 6.27 பில்லியன் மக்கள் முழு கிரகணத்தையும் பார்க்க முடியும். சுமார் 4.9 பில்லியன் மக்கள் சந்திர கிரகணத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகக் காண முடியும்.
இந்தியாவில் அடுத்தடுத்து வரும் சந்திர & சூரிய கிரகணங்கள்
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, இந்தியாவில் கடைசியாகத் தெரிந்த சந்திர கிரகணம், 2023 அக்டோபர் 28 அன்று நிகழ்ந்த ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும். இந்தியாவில் அடுத்த முழு சந்திர கிரகணம் 2026 மார்ச் 3ஆம் தேதி நிகழும். குறிப்பாக, இந்தச் செப்டம்பர் 'ரத்த நிலா' நிகழ்ந்து சில வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 21, 2025 அன்று ஒரு பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.