உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் தங்கப் பதக்கம் பெற்றார்.
மெக்ஸிகோவின் குவாடலஜாரா நகரில் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் நகரத்தை சேர்ந்த மனு பாகர் (16) தங்க பதக்கம் பெற்றார். 10 மீட்டருக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெற்றி பெற்றார்.
இவர் மெக்ஸிகோவின் அல்ஜண்ட்ரா ஜாவாலாவை 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அல்ஜண்ட்ரா கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். அதாவது, தங்க பதக்கம் பெற்ற மனு பாகர் பிறப்பதற்கு 4 ஆண்டுகள் முன்பிருந்தே.
இந்தியாவின் மனு பாகர் கடந்த 2 ஆண்டுகளாகத் தான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரண்டே ஆண்டுகளில், அண்டர் 18 பிரிவு, ஜூனியர் (அண்டர் 21), சீனியர் என 3 பிரிவுகளிலும் தேசிய அளவில் பல போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்தார்.
இந்த வெற்றி குறித்து பேசிய மனு பாகர், “வருங்காலத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிய இந்த தங்க பதக்கம் எனக்கு ஊக்கமளிக்கிறது. எனக்கு ஊக்கமளித்த என் குடும்பத்தினர், பயிற்சியாளருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்”, என தெரிவித்தார்.
ஏற்கனவே, இத்தகைய உலக சாதனையை இந்தியாவின் ககன் நரங் மற்றும் ராஹி சர்னோபாட் ஆகியோர் புரிந்தனர். இருவருமே தங்களுடைய 23வது வயதில், முறையே 2006 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இச்சாதனையை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே உலக துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரட்டையர் பிரிவில் தன் ஜோடி ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் இணைந்து மனு பாகர் தங்கப்பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.