'வந்துட்டாருய்யா 3டி பிளேயர்' உலகக் கோப்பை ஆண்டில் ஃபார்முக்கு வந்த விஜய சங்கரை கலாய்க்கும் ரசிகர்கள்
ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டி வரும் குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் அவரை 3டி (3D) வீரர் என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Vijay Shankar 3D player Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று மாலை ஈடன் கார்டனில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Advertisment
இந்த ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விஜய் சங்கர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். மேலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர் அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 200க்கு மேல் இருந்தது.
நடப்பு சீசனில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விஜய் சங்கர் ஒரு பேட்டராக சிறந்த தாக்கத்தை அவரது அணியில் ஏற்படுத்தி வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 49.75 சராசரியில் 199 ரன்கள் (2 அரை சதங்களுடன்) எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 63* ஆகவும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 165க்கு மேலும் உள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டி வரும் விஜய் சங்கர் இந்த இறுதியில் இந்திய மண்ணில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்றும் அவரை 3டி (3D) வீரர் என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
3டி வீரர்? காரணம் என்ன?
2019ம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியில் விஜய் சங்கரின் தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்தன. யுவராஜ் சிங்கிற்கு பிறகு நம்பர் 4 இடத்தில் ஆட ஒரு சிறந்த வீரரை தேர்வுக்குழு தேடி வந்த நிலையில், அந்த இடத்திற்கான மோதலில் அம்பத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் போன்றவர்கள் இருந்தார்கள். எனினும், அந்த இடத்திற்கு சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கு காரணமாக, அவருடைய மூன்று டைமன்ஷன் திறனை குறிப்பிட்டு இருந்தார்கள். அதாவது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அவர் கை தேர்ந்தவர் என்று கூறி இருந்தனர். இதனால், விரக்தி அடைந்த மூத்த வீரர் அம்பத்தி ராயுடு ட்விட்டரில் இந்த உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க தான் 3டி க்ளாசஸ் வாங்கப்போகிறேன் என்று பதிவிட்டு கலாய்த்து இருந்தார்.
வெற்றிடம்
இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐ இந்திய அணி வீரர்களை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மிடில் -ஆடர் வீரருக்கான தேடல் இருந்து வருகிறது. ஏன்னென்றால், கடந்த ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தற்போது தான் தேறி வருகிறார். இதேபோல் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டு வர காலம் எடுக்கும். எனவே, அவர்களது இடத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது.
அந்த இடத்தை நிரப்ப தான் தற்போது இந்திய நிர்வாகம் வீரர்கள் தேடலில் இருந்து வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஜொலிக்கும் இந்திய வீரரை அவர்கள் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவர் மீண்டும் அந்த இடத்தை பிடிப்பார் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.