FIM எனப்படும் Federation Internationale de Motocyclisme மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் இந்திய இளம் வீராங்கனை ஒருவர் முதன் முதலாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருக்கிறார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (23), FIM மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பையில் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டார். துபாயில் நடைபெற்ற முதல் சுற்றில் வெற்றிப் பெற்ற பிறகு, போர்சுகளில் நடந்த ரேஸில் மூன்றாம் இடமும், ஸ்பெயினில் ஐந்தாம் இடமும், ஹங்கேரியில் நான்காம் இடமும் பிடித்த ஐஸ்வர்யா, ஒட்டுமொத்தமாக ஜூனியர் பிரிவில் 46 புள்ளிகளுடன் இரண்டாம் பிடித்து கோப்பையை வென்றார். முதல் இடத்தை சிலி நாட்டின் தோமஸ் டி கவார்டோ கைப்பற்றினார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐஸ்வர்யா, "உண்மையில் எனக்கு பேச ஏதும் வார்த்தை இல்லை. கடந்த ஆண்டு, ஸ்பெயினில் நடைபெற்ற தொடரில் காயமடைந்த நான், எனது கரியர் முடிந்தது என்றே நினைத்தேன். ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
அது எனது வாழ்வின் மிகக் கடுமையான காலக்கட்டம். ஆனால், நான் என்னை நம்பினேன். ஆறு மாதங்கள் கழித்து எனது பைக் மீது காலடி எடுத்து வைத்தேன். அதனால், இந்த உலகக் கோப்பை எனக்கு மிகப்பெரியது. நிறைய படிப்பினை பெற்றிருக்கிறேன்" என்றார் பெருமிதமாக.