இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து தனது ஓய்வு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் ஒயிட்-பால் போட்டிகளில் இருந்து ஒய்வு கேட்டார்.
கே.எல் ராகுலின் கோரிக்கை முன்பு ஏற்பதாக கூறியிருந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடுமாறு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற கே.எல் ராகுல், முதல் மூன்று போட்டியில் அவர் ஓரளவு ரன் சேர்த்தார். கடைசி இரண்டு போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை. மொத்தமாக அவர் 5 போட்டிகளில் ஆடி 276 ரன்கள் எடுத்தார்.
கே.எல் ராகுல், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டை விட முன்னிலையில் இருக்கிறார். கடைசியாக இந்தியா இலங்கை அணிக்கு எதிராக ஆடிய ஒருநாள் போட்டியில் ராகுல் ஆடவில்லை. அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தான் ஆடி இருந்தார். விக்கெட் கீப்பர் வீரராக அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வைக்கி நினைக்கிறது இந்திய அணி நிர்வாகம்.
ராகுலைப் போல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்ற மற்ற மூத்த வீரர்களுக்கும் ஓய்வு கிடையாது. குறிப்பாக, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய முக்கிய வீரர்கள் இங்கிலாந்து தொடரில் ஆட உள்ளனர். காயத்தால் அவதியுற்று வரும் பும்ரா மட்டும் பங்கேற்க வாய்ப்பில்லை.