Virat Kholi | Anand Mahindra: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூருவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியாவும் 16 ரன்கள் எடுத்ததால் 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. 2வது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 11 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
மிரட்டலாக தடுத்த கோலி
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் விராட் கோலி சிக்சரை தடுத்த நிகழ்வு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. ஆட்டத்தின் 17வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அந்த நேரத்தில் ஆப்கான் வெற்றிபெற 20 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஆப்கான் வீரர் ஜனத் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.
ஆனால், பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி பந்து சிக்சர் செல்வதை தடுத்து நிறுத்தினார். அவரது பீல்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப்பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிக்சருக்கு செல்லவிருந்த பந்தை விராட் கோலி அருமையான பீல்டிங் மூலம் தடுத்தது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சிக்சர் நோக்கி பறந்த பந்தை கோலி தடுத்ததை ரசிகர்களைப் போலவே தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவும் திகைத்துப் போனார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விராட் கோலி சிக்ஸர் போன பந்தை தடுக்கும் புகைப்படத்துடன், “ஹலோ, ஐசக் நியூட்டனா? புவியீர்ப்பு எதிர்ப்பு நிகழ்வைக் கணக்கிடுவதற்கு இயற்பியலின் புதிய விதியை வரையறுக்க எங்களுக்கு உதவ முடியுமா??” என்று கேள்வி எழுப்பும் கேப்டசனுடன் பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்களும் ஜாலியான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“