புரோ கபடி லீக் தொடரின் 12-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பையில் நடைபெற்றது. இதில், முதல் நாளில் ஈரான் வீரர் முகமது ரேசாவை ரூ. 2.23 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. இதன் மூலம், புரோ கபடி லீக் ஏல வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, ரூ. 2 கோடிக்கு மேல் ஏலம் போன வீரர் என்கிற பெருமை அவர் பெற்றார்.
தொடர்ந்து தேவங்க் தலால் ரூ. 2.20 கோடிக்கு பெங்கால் அணியால் வாங்கப்பட்டாா். டெல்லி அணி ரூ. 1.90 கோடிக்கு அஷுவை வாங்கியது. பெங்களூரு புல்ஸ் அணி ரூ. 1.13 கோடி கொடுத்து, யோகேஷ் தாஹியாவை தட்டிச் சென்றது. இந்நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி ரூ. 1.41 கோடிக்கு அர்ஜுன் தேஸ்வலை வாங்கியது.
தனது சிறப்பான ரெய்டு மற்றும் துல்லியமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற அர்ஜுன், 'ரெய்டு-மெஷின்' என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தின் பாசியாவைச் சேர்ந்த 25 வயதான இவர், சீசன் 9 இல் சிறந்த வீரராக (MVP) ஜொலித்தார். மேலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாவது பட்டம் வெல்ல பெரிதும் பங்காற்றினார். மேலும், இதுவரை 114 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 1,174 ரெய்டு புள்ளிகளுடன், லீக்கின் பிரபலமான ரெய்டு வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 9.86 என்ற சராசரியில் 230 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.
தற்போது அர்ஜுன் தேஷ்வால் தமிழ் தலைவாஸின் மற்றொரு நட்சத்திர ரைடரான இந்திய கேப்டன் பவன் செஹ்ராவத்துடன் இணைந்துள்ளர். கடந்த இரு சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய 'ஆல் ரவுண்டர்' பவன் ஷெராவத்தை, தமிழ் தலைவாஸ் அணி ரூ. 59.50 லட்சத்துக்கு மீண்டும் வாங்கியது. இதற்கு முன் கடந்த 9 வது சீசனில் இவர், தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடி இருந்தார். ஆனால், காயம் காரணமாக தொடக்கப் போட்டியிலே விலகினார் என்பது குறிபிடத்தக்கது.