பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லபுசேஸன் 109 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து. இதனால் 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அதிகபட்ச முன்னிலை பெறும என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியில் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் – வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட எதிர்த்து ரன்கள் குவித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 250 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதில் தனது 2-வது போட்டியில் முதல் அரைசதத்தை பதிவு செய்த தாகூர் 67 ரன்களிலும், அறிமுகப்போட்டியில் அசத்திய சுந்தர் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
துவண்டு கிடந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியால் இந்திய அணி 336 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே பின்தங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வகை தொடர்களிலும் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கணிசமான வாய்ப்புகள பெற்றார். ஆனால் டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு ஜாம்பாவன்கள் இருந்ததால், முதல் 3 போட்டிகளில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அஸ்வின் 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விலகினார். இதனால் ஆடும் லெவன் அணியில் வாயப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளும். பேட்டிங்கில் 62 ரன்கள் என ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாத அஸ்வின், பி.சி.சி.ஐ.யின் சேனலுக்கான தொகுப்பாளராக மாறி, 3-வது நாளில் நட்சத்திர வீரர்களான ஷர்துல் தாகூர் வாஷிங்டன் சுந்தரை பேட்டி எடுத்தார்.
மேலும் 4-வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய தமிழகத்தில் நடராஜன் நேற்று முதல் முறையாக தனது சர்வதேச பேட்டிங்கை தொடங்கினார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது ரன்கணக்கை தொடங்கிய நடராஜன், பெரும்பாலும் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சில் திணறித்தான் ஆடினார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும் திறம்பட சாமாளித்த அவர், ஸ்டார்க் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் பாதுகாத்துக்கொண்டார்.
இந்நிலையில், முதல் தர கிரிக்கெட்டில் தனது கடைசி 10 இன்னிங்சில் ரன் கணக்கை தொடங்காத நடராஜன், இந்த போட்டியில், 9 பந்துகளில் 1ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய வீரரின் பந்துவீச்சை "எப்படி உணர்ந்தீர்கள்? மிட்செல் ஸ்டார்க்கின் ஒரு ஓவரை எதிர்கொண்டதில் உங்களுக்கு என்ன உணர்வு ஏற்பட்டது என அஸ்வின் தமிழில் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நடராஜன், முதல் பந்தை எதிர்கொண்டபோது பதற்றமாக இருந்தது. ஸ்டார்க் பந்தில் காயமடையும் அபாயம் இருந்த்து. ஆனாலும் அதில் இருந்து தப்பித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஸ்வின் கூறுகையில், இக்கட்டான சூழ்நிலையில், ஷார்துல் தாகூர் மற்றும் வாஷிங்கடன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் இந்திய அணியை சரிவில் மீட்க உதவியது. முதல்தரத் தொடரில் கடந்த கடந்த 10 இன்னிங்சில் ரன்கணக்கை தொடங்காத நடராஜன், முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் மார்க் வாங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டுக்கான பெற்ற முதல் மார்க் என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.