இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த புதன்கிழமை திடீரென அறிவித்தார். இதன் மூலம் அவரது 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவருக்கு இன்னாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “அஸ்வின் அண்ணா, அணியின் சக வீரர் என்பதை விட, நீங்கள் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும் விளையாட்டின் உண்மையான சாம்பியனாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் விளையாடியது பெருமையாக உள்ளது.
ஒரே மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் நாம். சேப்பாக்கத்தில் உங்களுடனும், உங்களுக்கு எதிராகவும் விளையாடி உங்களைப் பார்த்தே வளர்ந்தவன் நான். களத்திலும், களத்திற்கு வெளியிலும் உங்களிடம் இருந்து கற்ற விஷயங்கள் எப்போதும் என்னுடன் இருக்கும். உங்களது அடுத்தடுத்த காரியங்களில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ளார் அஸ்வின். விஜய் நடிப்பில் வெளிவந்த 'கோட்' படத்தில் தந்தை விஜய் சிவகார்த்திகேயனிடம் கூறுவது போல், அஸ்வின் வாஷிங்டன் சுந்தரிடம், 'துப்பாக்கிய புடிங்க வஷி' என்று பதில் அளித்துள்ளார்.
அஸ்வினின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அஸ்வின் 'கோட்' பட சீனை ரியலாக கிரியேட் செய்து விட்டார் என்றும் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“