இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்த அவர் 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் அசத்தி இருக்கிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ashwin reveals his reason for announcing his retirement during the Australia tour
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்ஸ்மேனாகவும் அதிரடி காட்டிய அவர், டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்சில் 3,503 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 1 அரைசதத்துடன் 707 ரன்களும், டி20 போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், அஸ்வின் இந்த தொடக்கத்தில் ஆஸ்ரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். சர்வதேச அரங்கில் அவர் படைத்துள்ள சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்தது.
இந்நிலையில், இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
விளக்கம்
இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்வின் ஆஸ்ரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ஏன்? என்பது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், தற்போதைய சி.எஸ்.கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக் ஹஸ்ஸியுடன் 'மைக் டெஸ்டிங் 123' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அஸ்வின், ஓய்வு பெறுவதற்கான தனது முடிவைப் பற்றி பேசினார். அப்போது அஸ்வின், "உண்மையைச் சொல்லப் போனால், என்னுடைய 100-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, நான் ஓய்வை அறிவிக்க விரும்பினேன். பின்னர் நான் நினைத்தேன், சரி, சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என நினைத்தேன். ஏனென்றால், நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள், விக்கெட்டுகளை வீழ்த்துகிறீர்கள், ரன்கள் எடுக்கிறீர்கள் என்று நான் நினைத்தேன். அதனால் கொஞ்சம் விளையாடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என விரும்பினேன்.
அந்த நாட்களில் நான் ரொம்ப ஜாலியா இருந்தேன், ஆனால் மைதானத்தில் மறுபடியும் விளையாட நான் கடக்க வேண்டிய கடினமான வேலைகள் இருந்தது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும், எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. எனக்கு மிகவும் சோர்வை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று குடும்பத்தினருடன் நேரத்தை ஒதுக்குவதாக இருந்தது. அவர்களுடன் நான் போதிய நேரத்தை செலவிடவில்லை
சென்னை டெஸ்டை இங்கேயே முடித்துவிடலாம் என்று நினைத்தேன். கடைசியில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி ஒரு சதம் அடித்தேன். அதனால் நீங்கள் நன்றாக விளையாடும்போது விட்டுக்கொடுக்க மிகவும் கடினம். அதனால், நான் தொடரைத் தொடர்ந்தேன், நியூசிலாந்திடம் நாங்கள் தோற்றோம். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக, அது வளர்ந்து கொண்டே இருந்தது. பின்னர், சரி, நான் ஆஸ்திரேலியாவுக்குப் போகட்டும் என்று நினைத்தேன். இது எப்படிப் போகிறது என்று பார்ப்போம். ஏனென்றால் நான் கடைசியாக ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, எனக்கு சிறந்த சுற்றுப்பயணமாக அமைந்திருந்தது. நான் பெர்த்தில் ஆடாதபோது, சரி, இந்த முழு வட்டமும் மீண்டும் தொடர்கிறது என்பது போல் இருந்தது. நீங்கள் உணர்ச்சி ரீதியாக என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதற்கு மக்கள் மிகக் குறைந்த மதிப்பையே சேர்க்கிறார்கள். அதனால், சரி, ஒருவேளை இதுதான் அந்த சரியான நேரமாக இருக்கலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்." என்று அஸ்வின் கூறினார்.