கத்தார் தலைநகர் தோகாவில், கடந்த 21ம் தேதி தொடங்கிய 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று(ஏப்.24) முடிவடைந்தது. இதில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். 1,500 மீ ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை 3:43.18 (SB) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3வதாக வந்து வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.
இறுதிக் கட்டத்தில் பதட்டம்
தங்கம் வென்ற பியு சித்ரா, இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். வெற்றிக்குப் பிறகு பேசிய சித்ரா, "இறுதிக் கட்டத்தில் பஹ்ரைன் வீராங்கனை கேஷா டைஜஸ்ட்-க்கு பின்னே நான் ஓடி வந்து கொண்டிருந்த போது மிகவும் பதட்டமாக உணர்ந்தேன். ஆசிய விளையாட்டில் அவர் என்னை மூன்றாம் இடத்திற்கு தள்ளியவர். இதனால், இறுதியில் மிகக் கடுமையாக எனது அடிகளை எடுத்து வைத்தேன்" என்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய டுட்டீ சந்த், "நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 100மீ & ரிலேவில் நான் பதக்கத்தை கைவிட்டேன். 100மீ ஓட்டத்தில் நான் அதிகபட்ச உழைப்பைக் கொடுத்தும் தோற்றேன். இதனால், 200மீ ஓட்டத்தில் பதக்கம் வெல்வது குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. என்னுடைய சிறப்பை கொடுத்தேன், இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்" என்றார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், எம்ஆர் பூவம்மா, விகே விஸ்மயா, ஆரோக்ய ராஜீவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 16.47 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.
பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் 'வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த ஆரோக்ய ராஜீவ் மேலும் பல சாதனைகளை படைத்திட வேண்டும்' என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.