ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பரிசோதனையில் தெரியவந்ததைத் அடுத்து, அவர் 4 ஆண்டுகளுக்கு எந்த போட்டியிலும் கலந்துகொள்ள முடியாதபடி வெள்ளிக்கிழமை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வென்ற தங்க பதக்கமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு கத்தாரில்ல் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒட்டப்பந்தய வீராங்கணை கோமதி மாரிமுத்து கலந்துகொண்டு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். திருச்சி மாவட்டம், முடிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு அப்போது முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கத்தாரில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றபோது, கோமதி மாரிமுத்து அனபோலிக் ஸ்டீராய்டு நண்ட்ரோலோன் என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படுள்ளது. இதையடுத்து, தடகள ஒருங்கிணைப்பு பிரிவு அமைப்பு தற்போது 31 வயதாகும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கணை கோமதி மாரிமுத்துவை கடந்த ஆண்டு நவம்பர் முதல் மே 2023 வரை 4 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு அனைத்து தர போட்டிகளிலும் கலந்துகொள்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று அறிவித்துள்ளது. மேலும், அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெற்ற தங்கப் பதக்கமும் அவரிடம் இருந்து திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து பரிசோதனையில் ஊக்கமருத்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருப்பது விளையாட்டு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.