Asian-games | india-vs-srilanka | womens-cricket: சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 3வது நாளான இன்று மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் உதேசிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி மற்றும் இனோகா ரணவீர தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 117 ரன்கள் கொண்ட வெற்றி துரத்திய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியில் டைட்டாஸ் சாது 3 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கயக்வாட் 2 விக்கெட்டுகளையும், தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ரகர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் தங்கம் வென்று அசத்தியுள்ளது. நடப்பு ஆசிய போட்டியில் கிரிக்கெட் முதல் முறையாக சேர்க்கப்பட்ட நிலையில், முதல் அணியாக தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றதன் மூலமாக இந்தியாவுக்கு 2வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“