ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று 2 தங்கம் வென்றது. மும்முறை தாண்டுதலில் அர்பிந்தர்சிங்கும், ஈட்டி எறிதலில் ஸ்வப்னா பர்மனும் சாதனை படைத்தார்கள்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 10-வது தங்கம் ஆகும். உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பனோவ் (16.62மீ) வெள்ளியும், சீன வீரர் சாவ் ஷுவோ (16.56 மீ) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் ராகேஷ் பாபு (16.40 மீ) ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
இதேபோல ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 11-வது தங்கம் இது! இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.