ஆசிய தடகள போட்டி: கோவை மாணவர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்
ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் யோகேஸ்வர் வெள்ளி பதக்கம் வென்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இவர் அண்மையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5-வது இளையோர் ஆசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். அதில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
சுமார் 40 நாடுகளை சேர்ந்த வீர்ர்கள் கலந்து கொண்ட போட்டியில் 3000 மீட்டர் தூரத்தை 8 நிமிடம் 39 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆசிய தடகள போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த கோவையை சேர்ந்த முதல் வீர்ரான, யோகேஸ்வர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்திய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய யோகேஸ்வருக்கு சக பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், தடகள வீர்ர்கள்,கோவை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என நூறுக்கும் மேற்பட்டோர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் யோகேஸ்வர் பேசுகையில், இந்த சாதனை புரிய விரும்பிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக கூறிய அவர்,அடுத்த இலட்சியமாக இளையோர் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதே தனது இலட்சியம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil