தன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக முடியாமல் போனதற்கு தான் பயின்ற இன்ஜினியரிங் படிப்பு தான் காரணம் என சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் - கவாஸ்கர் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் அவர் விளையாடவுள்ளார்.
இந்நிலையில், தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படாமல் இருந்த காரணம் குறித்து புது விதமான விளக்கத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதன்படி,
"நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகாததற்கு நான் படித்த இன்ஜினியரிங்தான் காரணம். ஏனெனில், உன்னால் முடியாது என்று யாரேனும் சொன்னால் நான் நிச்சயம் அதனை நோக்கி ஓடி சாதித்து காட்டுவேன்.
ஆனால் உன்னால் முடியும் என்று சொல்லிவிட்டால் தூங்கி விடுவேன். அதுபோல தான் நிறைய பேர் என்னை, 'நீ இந்திய அணியின் கேப்டனாக தகுதியானவன்' என்று ஆதரவு கொடுத்தார்கள். இப்படி என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியும் என்று பலரும் சொன்னதாலேயே நான் தூங்கிவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.