திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பத்மபூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டி பேசினார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசிய பி.வி சிந்து தெரிவித்ததாவது;
உங்களது குழந்தைகள் விரும்பும் விளையாட்டை கண்டறிந்து அவர்களை நீங்கள் ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்கள் உங்களது குழந்தைகள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உந்துதலை தாருங்கள்.
இதையும் படியுங்கள்: தொடங்கிய இடத்திலே கடைசி போட்டி… கண்ணீர் மல்க விடைபெற்ற சானியா!

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவது இயல்பு. சிலர் சின்ன வயதில் வெற்றி பெறுவார்கள், ஆனால் அது முக்கியமல்ல, வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியம். நிறைய நேரங்களில் நான் தோல்வி அடைந்த போதும் எனது பெற்றோர்கள் எனக்கு தட்டிக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். படிப்படியாகத்தான் முன்னேறினேன். விருதுகள், சான்றிதழ்கள் எல்லாம் படிப்படியாகத் தான் கிடைத்தது. இங்கு எண்ணற்ற சாதனையாளர்கள் இருக்கலாம்,
எண்ணற்ற பி.வி சிந்துக்கள் இருக்கலாம், அவர்களை கண்டறிந்து வெளி கொண்டு வரும் முக்கிய பொறுப்பு கண்டிப்பாக ஆசிரியர்களுக்குத்தான் உண்டு.
நான் நாள்தோறும் காலை, மாலை என 27 கிலோ மீட்டர் பயிற்சிக்காக பயணித்து வீடு திரும்புவேன். என் மனதில் எண்ணி கொண்டதெல்லாம் நம்மால் ஏன் முடியாது? தங்க பதக்கத்தை வெல்ல முடியும் என்ற மன உறுதியுடனே தினமும் செயல்பட்டேன் பயிற்சிகளை மேற்கொண்டேன். 3 மாதம் மொபைல் போன்களை பயன்படுத்தாமல் இருந்தேன். 3 மாத காலம் எந்த ஒரு துரித பாஸ்ட் புட் உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தேன். பின்னர், என்னால் சாதிக்க முடிந்தது,
இந்தியாவிற்காக மேடையில் நிற்கும்போது எப்போதும் மகிழ்ச்சி அடைவேன். சில்வர் சிந்து என்று எனக்கு பலர் பெயரே வைத்து விட்டார்கள். அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல் நான் தங்க பதக்கத்தை வெல்வது எப்படி என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 7 முறை தோற்ற பின்னர் டிசம்பரில் மீண்டும் வெற்றி பெற்றேன், சாம்பியன்ஷிப் வென்றேன். என்னுடைய வாழ்வில் நான் கற்று கொண்டது தோல்விகளின்போது நாம் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதே.

தங்க பதக்கம் வெல்ல கடிமான பாதைகளைத் கடந்து வந்தேன். எல்லாம் உடனே எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால், என்னுடைய வாழ்வில் உண்மையில் எண்ணற்ற கடினமான சூழலை சந்தித்தேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், தங்க ஸ்பூனில் சாப்பிடவில்லை, கடின முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெல்லலாம் எனப் பேசினார்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பி.வி சிந்து பேசியதாவது;
என்னுடைய இன்ஸ்பரேசன் பேட்மிட்டன் வீரர் லிண்டன். முதலில் சிறுவயதில் எனக்கு டாக்டராக வேண்டும் என்கிற கனவுதான் இருந்தது. பின்னர் தான் பேட்மிட்டன் மீது ஆர்வம் வந்தது.
கடினமான நேரத்தில் எப்படி மனதை திடப்படுத்துவீர்கள் என்கிற கேள்விக்கு, களத்தில் சிரமமான நேரங்களில் இந்த அளவிற்கு நாம் வளர எவ்வளவு சிரமம் அடைந்தோம், எவ்வளவு பயிற்சி, எவ்வளவு கிலோ மீட்டர் பயணம், இதை தான் என்றும் எண்ணுவேன். வெற்றி தோல்விகளை கண்டு மனதை மாற்றி கொள்ள மாட்டேன்.

ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதே போல் இலக்கு என்பதும் மிக மிக முக்கியம். கல்வி, விளையாட்டு இவ்விரண்டுமே முக்கியம் தான். விளையாட்டை விரும்பும்போது கல்வி பெரிதல்ல என்று கூறுவது தவறு. கல்வி உங்களை மீண்டும் புத்துணர்வாக மாற்ற உதவும். கல்வியும் முக்கியம் என்பதை விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள குழந்தைகள் மறந்து விடக்கூடாது.
கடைசியாக யோகா போன்ற பயிற்சிகளை கண்டிப்பாக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார் பி.வி சிந்து.
பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிராட்டிவ் சந்த், கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆர்த்தி நேரு, கேர் இண்டர்நேஷனல் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி, ப்ரீத்தி, சீனியர் பிரின்ஸ்பல் கேர் இண்டர்நேஷனல் பள்ளி, கீதா, பட்நாயக் முதல்வர் கேர் இண்டர்நேஷனல் பள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பி.வி சிந்து வருகை முன்னிட்டு கேர் கல்வி குழுமத்தை அல்லாத பிற பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் அவரை காண ஆவலுடன் திரண்டு வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil