இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களை இந்த ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.
மேலும், கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
34 வயது வலது கை ஆஃப் பிரேக்கரான அஸ்வின் 2010 இல் அறிமுகமானதிலிருந்து இதுவரை 79 டெஸ்ட், 111 ஒருநாள் மற்றும் 46 டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
சமீபத்தில், 22 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை கொண்ட ஒரே பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றார். 38 வயதான லெஜண்ட்ரி கிரிக்கெட்டர் மிதாலி, ஜூன் 26, 1999 அன்று அறிமுகமானார். ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை ஒப்பிடுகையில் மிதாலி ராஜை விட சச்சின் டெண்டுல்கர் (22 வயது 91 நாட்கள்) மட்டுமே நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடியவர். இவர்கள் தவிர, 22 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் விளையாடவில்லை.
இது தவிர, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. ஒடிசா அரசு தடகள வீரர் டூட்டீ சந்த் என்பவரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. டூட்டியைத் தவிர, ஒடிசா அரசு மேலும் ஐந்து பரிந்துரைகளை விளையாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற ஐந்து பேரில் ரோஹித் சர்மாவும் ஒருவர். கடந்த ஆண்டு விருது வழங்கப்பட்ட ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் ஆவார்.
தேசிய விளையாட்டு விருதுகள் 2021 க்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்பு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil