/indian-express-tamil/media/media_files/2025/06/23/benediction-rohit-2025-06-23-09-37-22.jpg)
ஒடிசாவில் நடைபெற்று வரும் 78வது சீனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த பெனடிக்ஷன் ரோஹித், ஆடவர் 100மீ பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சஜன் பிரகாஷ் 53.55 விநாகளில் நிகழ்த்திய தேசிய அளவிலான சாதனையை, பெனடிக்ஷன் ரோஹித் 52.57 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
2023 சீனியர் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தையும், 2024-இல் இரண்டாவது இடத்தையும் பிடித்து தங்கப் பதக்கம் வெல்ல தவறிய ரோஹித், இம்முறை அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்துடன் தேசிய சாதனையும் படைத்துள்ளார்.
"நான் 2023 முதல் 100மீ பட்டர்ஃபிளை பிரிவில் பங்கேற்று வருகிறேன், இந்த பதக்கத்திற்காக நீண்ட காலமாக உழைத்து வருகிறேன்" என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 50மீ பட்டர்ஃபிளை பிரிவில் வெற்றி பெற்ற ரோஹித், தனது முதல் 100மீ பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். முன்னதாக, 2024-ஆம் ஆண்டு மங்களூரில் நடைபெற்ற சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்பில் 50மீ பட்டர்ஃபிளை பிரிவில் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
21 வயதான ரோஹித் பதற்றமின்றி செயல்பட்டு இலக்கை அடைந்தார். "2023 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நான் நன்கு தயாராக இருந்தேன் ஆனால், அதிகப்படியான சிந்தனை மற்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தால் அனைத்து போட்டிகளிலும் கிட்டத்தட்ட தோல்வியடைந்தேன். அந்த நிகழ்வுக்கு பிறகு, நான் என்னை அமைதிப்படுத்திக் கொள்ளவும், முடிவுகள் பற்றி அதிகம் சிந்திக்காமல் இருக்கவும் கற்றுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.
மற்றொரு போட்டியில், தமிழகத்தின் தனுஷ் சுரேஷ் ஆடவர் 200மீ பிரெஸ்ட்ரோக் பிரிவில் 2:19.17 விநாகளில் போட்டியை முடித்து தங்கப் பதக்கம் வென்றார். கர்நாடகாவின் மணிகண்டா மற்றும் எஸ்.எஸ்.சி.பி-யின் ராணா பிரதாப் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.