புவனேஷ்வர் குமார் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார்.
News about Instagram, Bhuvneshwar Kumar in Tamil: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் புவனேஷ்வர் குமார். பந்தை 'ஸ்விங்' செய்வதில் வல்லவரான இவர் கடந்த 2012ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமானார். 21 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், 121 ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், 87 டி20-யில் 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
Advertisment
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்த புவி, டி20 போட்டிகளில் விக்கெட் பெரிய அளவில் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராகவும் இருந்தார். காயம் காரணமாக சில தொடர்களில் இடம்பெறவில்லை. காயம் சரியான பின்பும் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.
33 வயதான புவி, கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக விளையாடினார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த போது அவரது இடத்தை இளம் வீரர்கள் பிடித்து விட்டனர். அதன் பிறகு அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார். இந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இதில் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
Advertisment
Advertisements
பரபரப்பை கிளப்பும் இன்ஸ்டா போஸ்ட்
இந்நிலையில், புவனேஷ்வர் குமார் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் செய்துள்ள சிறிய மாற்றம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தனது இன்ஸ்டாகிராம் பயோவில் முன்பு 'இந்தியன் கிரிக்கெட்டர்' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், தற்போது அதனை மாற்றி 'இந்தியன்' என மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்த மாற்றம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறாரா? என்ற அச்சத்தை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவரது ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil