10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த 47-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 210 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான், 16-வது ஓவரிலே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bihar CM announces 10 lakh cash pirce for 14-year-old IPL sensation Vaibhav Suryavanshi
ராஜஸ்தானின் இந்த அசாத்தியமான வெற்றிக்கு காரணம், அந்த அணிக்காக களமிறங்கிய மிரட்டலாக மட்டையைச் சுழற்றிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான். ஜெய்ப்பூர் மண்ணில் சிக்ஸர் மழை பொழிந்த அந்த இளம் வீரர், குஜராத் அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். அத்துடன் வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி, 11 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மேலும், குஜராத் அணிக்கு எதிரான இந்த சதம் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த இந்தியர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
பரிசு
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான சதத்தைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் நிதிஷ் குமார் வைபவ் சூர்யவன்ஷி தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஐபிஎல் வரலாற்றில் (14 ஆண்டுகள்) சதம் அடித்த இளைய வீரரான பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். அவரது கடின உழைப்பு மற்றும் திறமையின் விளைவாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய நம்பிக்கையாக மாறிவிட்டார். அனைவரும் அவரைப் பற்றி பெருமைப்படுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டு வைபவ் சூர்யவன்ஷியையும் அவரது தந்தையையும் சந்தித்தேன், அந்த நேரத்தில், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன். ஐ.பி.எல்-லில் அவரது அற்புதமான ஆட்டத்திற்குப் பிறகு, தொலைபேசியிலும் அவரை வாழ்த்தினேன். பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கும் மாநில அரசு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை வழங்கும். வைபவ் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக புதிய சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி பீகார் மாநிலம் சமட்சிபூரைச் சேர்ந்தவர் என்பது குறிபிடத்தக்கது.