Ms Dhoni | Ruturaj Gaikwad | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு மும்பை நடந்த ஆட்டத்தில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி அமைத்த அஜிங்க்யா ரஹானே ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 5 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த ரச்சின் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை துரத்திய 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
வழக்கமாக தொடக்க வீரர் ரோலில் களமாடும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், நேற்று முதல் விக்கெட்டுக்குப் பின் வந்த நிலையில், ரச்சின் விக்கெட்டுக்குப் பிறகு வந்த சிவம் துபேவுடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இருவரும் அரைசதம் அடித்து களத்தில் இருக்க, 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 69 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் கேப்டன் ருதுராஜ்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 17 ரன்னுக்கு நடையைக் கட்ட, அவருக்குப் பின் வந்தார் முன்னாள் கேப்டன் தோனி. ஆட்டத்தின் கடைசி ஓவரை மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீச, அவரது கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட தோனி ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டு மிரட்டினார். கடைசி பந்தில் அவர் 2 ரன்கள் எடுத்து சி.எஸ்.கே அணியினர் எதிர்பார்த்த 200+ ரன்களை எட்ட உதவினார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களும், தோனி 4 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து, 207 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணியில் அதிரடியாக விளையாடி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து (63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 105 ரன்கள்) அசத்தினார். ஆனால், அவருடன் ஜோடி அமைத்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு வெளியேறினர். இதனால், மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது. மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னையின் மதீஷ பத்திரன 4 விக்கெட்டையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தோனியை ஜாலியாக கலாய்த்த ருத்து
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முன்னாள் கேப்டன் தோனியை ஜாலியாக கலாய்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டிக்குப் பிறகான சந்திப்பில் வர்ணனையாளர் கேப்டன் ருதுராஜிடம், "இந்த வெற்றியில் உங்களை அதிகம் மகிழ்வித்தது எது? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த கேப்டன் ருதுராஜ், "எங்களது இளம் விக்கெட் கீப்பர் (எம்.எஸ் தோனி) லோ-ஆடரில் இறங்கி தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்தது மிகவும் உதவியாக இருந்தது. அதுதான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது" என்று புன்னகைத்தவாறே கூறினார்.
மேலும் பேசிய அவர், "இதுபோன்ற மைதானத்தில் உங்களுக்கு கூடுதலாக 10-15 ரன்கள் தேவை. நாங்கள் 215-220 ரன்களை என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில், நாங்கள் எங்கள் திடத்தை தெளிவாக செயல்படுத்தினோம். பவர்பிளேயில் கூட 6 ஓவர்களுக்கு 60 ரன்கள் தான் விட்டுக் கொடுத்தோம். இந்த வகையான மைதானங்களுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் திறமைகள் தேவை. எங்களது (லசித்) மலிங்கா (மதிஷ பத்திரன) சிறப்பாக பந்துவீசி அந்த யார்க்கர்களை ஆணி போல் அடித்து இறங்கினார்.
ஜிங்க்ஸ் (ரஹானே) சற்று சிரமத்துடன் இருந்தார். அவர் ஓப்பன் செய்து விரைவாக ரன்களை எடுப்பது நல்லது என்று நினைத்தேன். நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்." என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“