கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்காக நிதி திரட்டும் விதமாக சாரிட்டி கோல்ஃப் போட்டி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மாற்றுதிறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் கோவை கோல்ஃப் கிளப்புடன் இணைந்து சாரிட்டி கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாவது சீசனாக செட்டிபாளையம் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் புல்வெளியில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 96 கோல்ஃப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர்.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் செஷாயர் அறக்கட்டளை துணை தலைவர் வி.ஆர்.நரேன், கோவை கோல்ஃப் கிளப் தலைவர் கோபிநாத், செயலாளர் துரைராஜ், கேப்டன் அஷ்வின் சந்திரன், அறக்கட்டளை பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்து,
அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த போட்டி இரண்டாவது ஆண்டாக கோவையில் நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சாரிட்டி கோப்பை கோல்ஃப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“