10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘CSK want to improve talent identification’: Chennai Super Kings batting coach Mike Hussey
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை ஆடியுள்ள 9 ஆட்டங்களில் 2 மட்டும் வெற்றி, 7 போட்டிகளில் தோல்வி என பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். போட்டியை நேரில் பார்க்க முன்பு போல யாரிடமும் தற்போது ஆர்வம் காட்டுவதில்லை என்றும், டிக்கெட்டுகள் ஒரு நேரத்தில் கள்ள சந்தையில் விற்கப்பட்ட சூழலில், தற்போது அதன் உண்மையான விலைக்குக் கூட வாங்க ஆள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில் சென்னை அணி சிக்கி இருக்கிறது. அஜிங்க்யா ரஹானே மற்றும் சிவம் துபே போன்ற அனுபவமிக்க வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு புத்துயிர் அளித்து வெற்றிகரமானவர்களாக மாற்றியது சி.எஸ்.கே. ருதுராஜ் உள்ளிட்ட எண்ணற்ற வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களது கேரியரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
தற்போது அதுபோன்ற மேஜிக்கை நிகழ்த்த சி.எஸ்.கே. தவறுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த தொடரில் 17 வயதான ஆயுஷ் மத்ரே, 22 வயதான தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் மற்றும் 20 வயதான ஷேக் ரஷீத் ஆகியோரை களமிறக்கி அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், திறமையான வீரர்களை அடையாளம் காணும் பணியை இன்னும் மேம்படுத்துவோம் என்று சி.எஸ்.கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "நாங்கள் மேம்படுத்த விரும்பும் ஒரு முக்கியப் பகுதியை நாங்கள் உண்மையில் அடையாளம் கண்டுள்ளோம், அது திறமைகளை அடையாளம் காணுவது ஆகும்.
எங்களுக்கு எல்லா வீடியோக்கள், தொகுப்புகள் மற்றும் பிற விஷயங்கள் அனுப்பப்படும். ஆனால் அவற்றை நேரடியாகப் பார்க்க, அது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகத்தைத் தருகிறது. நாம் சில பயிற்சி விளையாட்டுகளை ஆட முடிந்தால், அவர்களை (இளம் வீரர்கள்) அழுத்தத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தால், நாம் முன்னேற எதிர்பார்க்கும் திறமையைப் பற்றி மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமீபத்திய பேட்டிங் சென்சேஷன், வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கைப் பார்க்கும் போது, ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோல் நாங்கள் உணர்ந்தோம். அவர் ஆடும் போது மொத்த அணியும் போட்டி பார்க்கும் பகுதிக்குள் வந்து, அங்கே உட்கார்ந்து ஆட்டைப் பார்ப்பார்கள், ஏனென்றால் அவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். நேற்று இரவு இந்த இளம் வீரரைப் பார்த்ததும் எனக்கும் அதே உணர்வு ஏற்பட்டது." என்று மைக் ஹஸ்ஸி கூறினார்.