சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. வேறு எந்த அணியும் இந்த மைல்கல்லை எட்டவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐ.பி.எல். சீஸனான 2008-ம் ஆண்டு முதல் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது. 2015-ம் ஆண்டு சென்னை அணி உரிமையாளர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் 2016, 2017 ஆகிய இரு ஆண்டுகளும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த 2 சீஸன்களை தவிர்த்துப் பார்த்தால், தற்போது நடைபெறுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 9-வது ஐபிஎல் சீஸன் ஆகும். இதில் விசேஷம், பங்கேற்ற ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியில் 2-வது சுற்றான ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறிய அணி சி.எஸ்.கே. மட்டும்தான். தவிர, ஒட்டு மொத்தமாகவே 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே ஐபிஎல் அணி ‘விசில் போடு’ சி.எஸ்.கே.தான்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ஐதராபாத் சன் ரைசர்ஸுக்கும் இடையே நேற்று புனேயில் நடைபெற்ற போட்டியில் அம்பத்தி ராயுடு சதம் உதவியுடன் தனது 8-வது வெற்றியை பெற்றது சி.எஸ்.கே.! இதன் மூலமாக இந்தத் தொடரில் அடுத்த போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திராமல் பிளே ஆஃப் சுற்றுக்கு தனது இடத்தை உறுதி செய்துவிட்டது சி.எஸ்.கே.!
ஐபிஎல் போட்டிகளில் சி.எஸ்.கே. அணியின் செயல்பாடு இது..
2008 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வி)
2009 : அரை இறுதி வரை முன்னேற்றம் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோல்வி)
2010 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தியது)
2011 : சாம்பியன் (இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது)
2012 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி.)
2013 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)
2014 : அரை இறுதிக்கு முன்னேற்றம் (கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் தோல்வி)
2015 : 2-வது இடம் (இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி)
2016, 2017 : விளையாடவில்லை.
இரு முறை கோப்பையை வென்றதுடன், 4 முறை 2-வது இடம், 9 முறை அடுத்த சுற்று வாய்ப்பு என ஐபிஎல் தொடரில் பலம் மிக்க அணியாக தன்னை நிரூபித்திருக்கிறது, சி.எஸ்.கே.!