Chess Olympiad Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 1187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அந்தப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் மற்றும் போட்டிக்கான அதிகாரிகள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகளில் போதுமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் இரு அரங்குகளிலும் சேர்த்து மொத்தம் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகள் மேஜைகளில் தயார் நிலையில் உள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டுக்கு முன்பாக, போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செஸ் போர்டுகள், அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் எல்லாம் துல்லியமாக செயல்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்கில் நேற்று பயிற்சி போட்டி நடைபெற்றது.
இந்தப் பயிற்சி போட்டியை காலை 10 மணிக்கு அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிக்காக செய்யப்பட்டு இருக்கும் முன்னேற்பாடுகளை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று பகலில் நேரில் பார்வையிட்டார்.
9 சுற்றுகள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற 1,414 வீரர், வீராங்கனைகள் 707 டிஜிட்டல் செஸ் போர்டுகளில் அமர்ந்து ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன் ஆடினார்கள். 5 வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை இந்த போட்டியில் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி திறமையை காட்டினர். இதில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 100-க்கும் மேற்பட்டோர் களம் கண்டதால் போட்டி நடைபெற்ற இடம் களைகட்டியது.
வெளிநாட்டு வீரர்கள் வருகை..
தமிழக தலைநகரில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக சென்னை வந்தடைந்தனர். தென்ஆப்பிரிக்கா, உருகுவே, நைஜீரியா, டோகோ, ஹாங்காங், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 18 வீரர், வீராங்கனைகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்று தங்கும் இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். முன்னதாக வீரர்கள் விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தின் (தம்பி) முன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சோனியா, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த தி.மு.க எம்.பி.க்கள்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ்களை தி.மு.க நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் தி.மு.க நாடளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பி. வில்சன் மற்றும் டி.ஆர்.பாலு போன்றோர் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil