இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, உச்சநீதிமன்றத்தால் நிர்வாகிகள் குழுவானது (CoA) நியமிக்கப்பட்டது. வினோத் ராய் இதன் தலைவராக உள்ளார். இந்த நிலையில், நிர்வாகிகள் குழு, பிசிசிஐ அதிகாரிகளின் அதிகார வரம்பை குறைத்துள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பான ஆட்சிமுறையை உருவாக்கும் வகையில் 12 முக்கிய அம்சங்கள் அடங்கிய குறிப்புகள் பிசிசிஐ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அதை அவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிர்வாகிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி உட்பட அனைத்து அதிகாரிகளும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் குழு வழிகாட்டுதலின்படியே நடக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை கடுமையாக எதிர்த்துள்ள பிசிசிஐ, "நிர்வாகிகள் குழுவை என்ன செய்ய சொல்லி உச்சநீதிமன்றம் நியமித்ததோ, அதைத் தவிர அனைத்தையும் அவர்கள் செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், அவர்களாக முடிவை எடுத்துக் கொண்டு 16 மாதங்களாக இங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பள்ளி முதல்வர்கள், நாங்கள் பள்ளி மாணவர்கள், அப்படித்தானே?" என்று காட்டமாக விமர்சித்து உள்ளது பிசிசிஐ.