கோவையில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் ஒன்றிணைந்து, இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். இந்தியா, மொரிஷியஸ், பஹ்ரைன், துபாய், அமெரிக்கா, இந்தோனேசியா, மஸ்கட், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யோகா வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இந்த சர்வதேசப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யோகா மைய ஆசிரியர்கள் நடுவர்களாகக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்ட்டிஸ்டிக், தனிநபர் மற்றும் குழு எனப் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், கோவை பிராணா யோகா மையத்துடன் இணைந்து 15-க்கும் மேற்பட்ட யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கங்களுடன் கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த சர்வதேச யோகா நடுவர்கள் ஜெயலட்சுமி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் கூறுகையில், "தற்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட பலர் யோகா பயிற்சிகளை நாடி வருகின்றனர். இவர்களில் பலர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். தற்போது பதக்கம் வென்றவர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினரும் குறிப்பாகத் திருமணமான பெண்களும் கலந்து கொண்டு பதக்கம் வென்றது மிகவும் பாராட்டத்தக்கது," என்று தெரிவித்தனர்.
செய்தி - பி. ரஹ்மான்