சென்னை நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடந்து முடிந்தது. கால்பந்து விளையாட்டை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னாள் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மாவட்ட கால்பந்து சங்கத் தேர்தல் கோவையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் அமைதியான முறையில் நடைபெற்றது. முன்னதாக, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராஜ் கோவை மாவட்ட கால்பந்து சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் செயல்முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய உறுப்பினர்களுக்கு தேர்தல் அட்டவணை மற்றும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் சரி பார்ப்புகளுக்கு பிறகு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் கோவை மாவட்ட கால்பந்து சங்க தலைவராக மதன் செந்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மதன் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க சங்கம் புதிய நிர்வாக குழு தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்யும்." என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரிக்கு உதவியாக வழக்கறிஞர்கள் சஞ்சீவ் குமார், முத்துக்குமார், ஆகிய இரண்டு உதவி தேர்தல் அதிகாரிகள் பணியாற்றியது குறிப்பிடதக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.