இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இவர் காசியாபாத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குனராகவும், விளம்பர தூதராகவும் செயல்பட்டார். இதனால், நம்பிக்கையான நிறுவனம் என கருதி, பலரும் ரூ.6 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்காததால் கம்பீர் மீது பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவுதம் கம்பீரை விடுவித்து சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
"ரியல் எஸ்டேட் நிறுவனங்களான ருத்ரா பில்ட்வெல் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட், எச் ஆர் இன்ஃப்ராசிட்டி பிரைவேட் லிமிடெட், யுஎம் ஆர்கிடெக்சர்ஸ் அண்ட் கான்ட்ராக்டர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் இணை நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பிராண்ட் அம்பாசிடராக கம்பீர் இருந்துள்ளார். அவர் 2011 இல் காஜியாபாத்தில் உள்ள இந்திரபுரத்தில் வரவிருக்கும் வீட்டுத் திட்டத்தை ‘செர்ரா பெல்லா’ என்று ஊக்குவித்துள்ளார். இது 2013 இல் ‘பாவோ ரியல்’ என மறுபெயரிடப்பட்டது.
விளம்பரங்கள் மற்றும் ப்ரோமோஷன் மூலம் கவரப்பட்டு, புகார்தாரர்கள் திட்டத்தில் பிளாட்களை முன்பதிவு செய்து, ரூ.6 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான தொகையை கொடுத்துள்ளனர். பணம் செலுத்திய பிறகும், 2016 வரை வீட்டுத் திட்டத்தில் எந்த உள்கட்டமைப்பு அல்லது முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியும் செய்யப்படவில்லை. மேலும், புகார் செய்யப்பட்ட காலம் வரை கட்டுமான பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது." என்று புகார்தாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, “கவுதம் கம்பீருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதில் உள்ள மனப் போக்கின் போதிய வெளிப்பாட்டை, தடை உத்தரவு பிரதிபலிக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளில் கவுதம் கம்பீரின் பங்கு குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும்.
"பிராண்டு தூதராக, முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த ஒரே குற்றம் சாட்டப்பட்டவர் கவுதம் கம்பீர். அவர் வழக்கில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவில் அவர் ருத்ரா பில்டுவெல்லுக்கு ரூ.6 கோடி செலுத்தியதையும், நிறுவனத்திடமிருந்து ரூ.4.85 கோடி பெற்றதையும் குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், கம்பீருக்கு ருத்ரா செலுத்திய தொகை, திட்டத்தில் முதலீடு செய்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தவில்லை என்பதையும் கவனித்த சிறப்பு நீதிபதி, வழக்கை மீண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அனுப்பி, "குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடும் வகையில் விரிவான புதிய உத்தரவை பிறப்பிக்க" உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“