India vs Australia, Mitchell Starc – Thangarasu Natarajan Tamil News: இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் 2-1 என்ற கணக்கில் பறிகொடுத்தது. ஆனால், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் வென்றதன் மூலம் தொடரில் 1-1 என்ற கணக்கில் நீடிக்கிறது. இந்நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.
மிட்சல் ஸ்டார்க் புரிய வைத்த பாடம் – நடராஜன் மீது கவனம் திருப்பும் பி.சி.சி.ஐ
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக வீரர் “நடராஜன்” போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஏன் அவசியம்? என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் இந்திய நிர்வாகம் உணர்ந்து கொண்டுள்ளது. இதனால், அவரது பக்கம் அதன் பார்வையைத் திருப்பியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய பேட்டிங் வரிசையை சிதைத்தார். குறிப்பாக, டாப் ஆடர் வீரர்களான ரோகித், கோலி, சுப்மன் கில், சூரியகுமார் கே.எல். ராகுல் போன்றோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனைப் பார்க்கும்போது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான வரிசையில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரைச் சேர்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பையைத் தவறவிடக்கூடும் என்பதால், எதிர்வரும் ஐபிஎல் 2023ல் தமிழக வீரர் நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் அவருக்கான வாய்ப்பு வந்து சேரும்.

தமிழக வீரரான தங்கராசு நடராஜனுக்கு ஐபிஎல் 2020 அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அந்த சீசனில் மட்டும் அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருந்தார். டெத் ஓவர்களில் தொடர்ந்து யார்க்கர்களை வீசும் அவரது திறமையால் அனைவரையும் கவர்ந்த அவருக்கு ‘யார்க்கர் கிங்’ என்ற செல்லப் பெயர் வழங்கப்பட்டது. மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த இந்திய அணிக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடராஜன், அதன்பிறகு சுற்றுப்பயணத்தின் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்த இந்திய அணியில் முக்க்கிய வீரராகவும் அவர் இருந்தார்.

இருப்பினும், ஐபிஎல் 2021ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன் அடுத்தடுத்த காயங்களால் அவதியுற்றார். அதற்காக அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டார். அதன்பின்னர், ஐபிஎல் 2022ல் விளையாடிய அவர் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளுடன் வலுவான கம்பேக் கொடுத்தார். ஆனால், மற்றொரு காயம் அவருக்கு பின்னடைவை கொடுத்தது. இதனால் டி20 உலகக் கோப்பையில் இடம் பெறத் தவறிவிட்டார்.

ஆனால், தற்போது நடராஜன் ஐபிஎல் 2023ல் களமாட ஆயத்தமாகி வருகிறது. கடந்த திங்கள் கிழமை முதல் அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்கிறார். அதனால், அவரை இந்திய மண்ணில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணி பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil