Cricket news in tamil: ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே 30 தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 'சுட்டிக் குழந்தை' என அழைக்கப்படும் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் சாம் கரன், சொந்த மண்ணில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் 2 தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி மே 30 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "ஐபிஎல் போட்டிகளில் எனது அணி தகுதி பெறவில்லை என்றால், சொந்த மண்ணில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கலாம். ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியை கண்டிப்பாக விளையாடியாக வேண்டும்" என்று சாம் கரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
22 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். இந்த போட்டிகளுக்கு பிறகு தோனி தலைமையிலான சென்னை அணியில் இணைய உள்ளார்.
"ஐபிஎல் போட்டியில் ஒரு வீரராக விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு, இது ஒரு சிறந்த தயாரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறன்.
ஐபிஎல் போட்டியில் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு என்னால் சரிசெய்ய முடியும் என நினைக்கிறேன். அதனால் நான் எங்கு பேட் செய்தாலும், பந்து வீசினாலும் அதை நன்றாக செய்து முடிக்க முயற்சிப்பேன். அதோடு வெவ்வேறு பகுதிகளில் எனது திறமையைக் காட்ட முயற்சிக்கிறேன். மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கான லெவன் அணியில் எனது இடத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இது இருக்கும்” என்று சாம் கரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி களமிறங்கிய சாம் சிறப்பாகவே ஆடினார். போட்டிகளின் துவக்கத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும் இறுதியாக நடந்த போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 14 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம், ஒரு அரைசதத்துடன் 186 ரன்களை சேர்த்திருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil