Cricket news in tamil: சமீபத்தில் ஈஎஸ்பிஎன் கிரிக்கெட் தொலைக்காட்சி நடத்திய '25 கேள்விகள்' நிகழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் கலந்து கொண்டார். அதில் தனது அணியைச் சேர்ந்த ஆண்ட்ரே பிளெட்சர் தான் மிகச் சிறப்பாக சமைக்க கூடியவர் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு பிடித்த கிரிக்கெட் அணிகளில் தன்னுடைய அணி முதல் இடத்திலும், இந்திய அணி 2வது இடத்திலும் உள்ளன என்றும் கூறியிருந்தார்.
சிறந்த கவர்-டிரைவ் அடிக்க கூடியவர்களில் எந்த வீரர் உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்விக்கு, தனது அணியின் 'டேரன் பிராவோ' தான் கவர்-டிரைவ் ஆடுவதில் கெட்டிக்காரர் என்று கூறியுள்ளார்.
நிக்கோலஸ் பூரன், 2019 -ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்). மற்றும் அந்த அணி சார்பாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகவும் ஆடி வருகிறார்.
ஒரு டி-20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க கூடிய வீரர்கள் என்று இந்திய வீரர் ரோகித் சர்மாவையும், மேற்கிந்திய தீவின் கிறிஸ் கெய்ல்லையும் குறிப்பிட்டுள்ளார். அதோடு டி-20 போட்டியில் அதிக சிக்ஸர்களை அடிக்க கூடியவர்களும் இவர்கள் தான் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணிக்காக விளையாடிய அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், 175 ரன்கள் அடித்து, டி-20 போட்டிகளில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு டி-20 போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி 10,000 ரன்களை கடந்துள்ளார். மற்றும் அவர் பங்கேற்று விளையாடிய ஒவ்வொரு டி-20 லீக் - களிலும் 20 சதங்கள் அடித்துள்ளார்.
அதேவேளையில் ஐபிஎல் டி-20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் ரோகித் சர்மா, ஐபிஎல் டி-20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார். 413 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 13,691 ரன்களை சேர்த்துள்ளார். அதே நேரத்தில் 340 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 8,974 ரன்களை சேர்த்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் இதுவரை அவர் விளையாடியுள்ள டி 20 போட்டிகளில் 1008 சிக்ஸர்கள் மற்றும் 1050 பவுண்டரிகளைக் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அதிக சிக்ஸர்களையும், அடிக்க கூடியவர்கள் வரிசையில் ரோகித் சர்மா மற்றும் கிறிஸ் கெய்ல்லை தவிர்த்து, இந்த வரிசையில் மேற்கிந்திய தீவின் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கீரோன் பொல்லார்ட் உள்ளனர் என்றும் பூரான் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil