Best I have seen KL Rahul bat says Rohit Sharma Tamil News: இங்கிலாந்து மண்ணில் தனது அசத்தலான சதத்தை பதிவு செய்துள்ள கேஎல் ராகுலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா.
Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 12ம் தேதி) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. எனவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.
Advertisment
இதில் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து அதிரடி காட்டிய ரோகித் சர்மா, அரைசதம் விளாசி அசத்தினார். மறு முனையில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர். அந்நிய மண்ணில் தனது நுனுக்கமான ஆட்டதை வெளிபடுத்திய ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் சிக்கி வெளியேறினார்.
இருப்பினும், ரோகித் சர்மா அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதம் விளாசினார். மேலும் ஆட்டநேர முடிவில் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கே.எல். ராகுலின் இந்த அசத்தலான சதம் குறித்து பேசியுள்ள தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, " கேஎல் ராகுல் விளையாடியதிலேயே இதுதான் மிகச் சிறப்பான இன்னிங்ஸ். அவரது சதத்திலேயே சிறந்த சதமும் இதுதான். ஏனென்றால் இந்த ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ஆட்டத்தை கொண்டுவந்தார். நேற்றைய ஆட்ட நேர முடியும் வரை ராகுலின் கவனம் சிறிது அளவுகூட சிதறவில்லை. அவரின் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனமாக இருந்தார்.
திட்டத்தை செயல்படுத்துவதில் நீங்கள் கவனமாக இருந்தால் அதனை நீங்கள் முழுமையாக முடிக்கலாம். ராகுலின் சிறப்பான செயல்பாட்டுக்கு அவருடைய ஃபோகஸ் தான் காரணம். ராகுலுக்கு நேற்றைய நாள் அவருடைய நாளாக அமைந்துவிட்டது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார்.
என்னுடைய பெஸ்ட் இன்னிங்ஸ் இது என்று நான் சொல்லமாட்டேன். இருப்பினும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த சவாலான சூழ்நிலையில் விளையாடுவது எளிது கிடையாது. இருப்பினும் நல்ல முறையில் துவக்கத்தைத் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது" என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.