Ravichandran Ashwin Tamil News: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் (ஐ.பி.எல். 2022) அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களம் காணுகின்றன. இதற்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், அணியில் தக்கவைக்கப்படும், விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தங்களது அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்எஸ் தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி) ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டதாக தெரிவித்தது. மேலும், இந்தாண்டு 4வது முறையாக அணி சாம்பியன் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்த அணியின் முக்கிய வீரர்களையும் மெகா ஏலத்தில் கண்டிப்பாக வாங்குவோம் என்றும் தெரிவித்து இருந்தது.
The @ChennaiIPL retention list is out! 👌
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! 👇#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரை, இளம் வீரர் ரிஷப் பண்ட்டை மீண்டும் கேப்டனாக அறிவித்த அந்த அணி அக்சர் படேல் (9 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி) ஆகிய முன்னணி வீரர்களையும் தக்கவைத்தது. ஆனால், அந்த அணியில் முன்னணி சுழற்பந்து வீரராக வலம் வந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினை தக்கவைக்கவில்லை.
How is that for a retention list, @delhicapitals fans❓#VIVOIPLRetention pic.twitter.com/x9dzaWRaCR
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
இந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் ’40 ஷேட்ஸ் ஆஃப் ஆஷ்’ குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அஸ்வின், சென்னை அணி தனது மனதிற்கு நெருக்கமான ஒரு அணி என்றும், அந்த அணிக்கு மீண்டும் திரும்ப தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நடைபெற உள்ள மெகா ஏலத்தைப் பொறுத்துதான் அது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு அணி. இந்த அணி எனக்கு ஒரு பள்ளி போன்றது. அங்குதான் நான் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி, ஆரம்பப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளியை முடித்தேன். 10 ஆம் வகுப்பு போர்ட்டு தேர்வுகளை முடித்து பின்னர் 11, 12ம் வகுப்புகளுக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாறினேன். பிறகு எனது ஜூனியர் கல்லூரியை அங்கு முடித்தேன். ஆனால் எல்லாவற்றையும் முடித்த பிறகு, வெளிப்படையாக ஒருவர் சொந்த அணி (வீடு) வர வேண்டும், இல்லையா? அதனால் நானும் சொந்த அணிக்கு (வீட்டிற்கு) திரும்பி வர விரும்புகிறேன். ஆனால் இது அனைத்தும் நடைபெற உள்ள ஏலத்தை பொறுத்ததுதான் அமையும்.” என்றார்.

10 அணிகள் இடம்பெறும் 2022 ஏலத்திற்கான ஏலத்தின் அமைப்பை தனது வீடியோவில் விளக்கிய அஷ்வின், 15வது சீசனில் எந்த அணியில் சேர்ந்தாலும் தனது முழுத்திறனுடன் விளையாடுவேன் என்று கூறினார்.
“ஏல அமைப்பு என்பது வித்தியாசமான பந்து விளையாட்டு என எனக்குப் புரிகிறது. 10 அணிகள், 10 விதமான உத்திகளைக் கொண்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் வித்தியாசமாகச் சிந்திப்பார்கள். எந்த அணியின் முக்கிய லெவனுக்கு நாங்கள் பொருந்துவோம் என்பது எங்களுக்குத் தெரியாது. அதனால் ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் ஒரு தொழில்முறையாக, நான் எங்கு சென்றாலும், எனது எண்ணம் எளிமையானது. எந்த உரிமையாளர் என்னை நம்பி, எனது திறமையயை பயன்படுத்த இவ்வளவு பணம் செலவழிக்கிறார்களோ, அவருக்கு எனது முழு திறனையும் கொடுப்பேன். அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டேன்.” என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளராக உள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், ஐ.பி.எல். தொடருக்கான தொடக்க சீசனில் அஸ்வின் ஒரு இந்திய வீரராக (அன்கேப்டு – uncapped) சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டார். ஜூன் 2010 இல் இலங்கைக்கு எதிராக அவர் இந்திய அணியில் அறிமுகமானார்.

சென்னை அணியில் 2015ம் ஆண்டு வரை அவர் இருந்தபோது, 94 இன்னிங்ஸ்களில் விளையாடி 90 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அவரது சராசரி 24.2 ஆக இருந்தது.
சென்னை அணி இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அஸ்வின் 2016 மற்றும் 2017 பதிப்பிற்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியில் சேர்ந்தார். அங்கு அவர் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 10 விக்கெட்டுகளை எடுத்தார்.

2018ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் அஸ்வினை சென்னை அணி எடுக்க தவறிய நிலையில், அவரை கிங்ஸ் லெவேன் (XI) பஞ்சாப் அணி எடுத்தது. அந்த அணியில் இரண்டு சீசன்களில் விளையாடிய பிறகு, கடைசியாக டெல்லி அணி மூலம் டிரேடிங் செய்யப்பட்டு விளையாடி இருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“