Delhi Capitals director of cricket Sourav Ganguly Said, "Rishabh Pant Will Not Be Available For IPL"
News about Rishabh Pant, Sourav Ganguly and IPL in Tamil: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் கடந்த டிசம்பர் 30ம் அன்று டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவரே காரை ஓட்டிச் சென்ற நிலையில், அதிகாலையில் சற்று கண் அசந்ததால் கார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டிவைடர் கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
Advertisment
இந்த மோசமான விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பண்ட்டின் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த வாரத்தில் ரிஷப் பண்ட்-க்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பண்ட் தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும், இந்தாண்டு நடவிருக்கும் ஐ.பி.எல் தொடரிலும் விளையட வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.
ஐ.பி.எல்-ல் இருந்து பண்ட் நீக்கம் - உறுதி செய்த கங்குலி
இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டதை டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் கங்குலி உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலி, "ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார். நான் டெல்லி கேப்பிடல்ஸ் உடன் தொடர்பில் இருக்கிறேன். இது ஒரு சிறந்த ஐபிஎல் ஆக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதில் நன்றாக விளையாடுவோம். ரிஷப் பண்ட்டின் காயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பாதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பிசிசிஐ ஆண்டுக்கு மாதம் எவ்வளவு செலுத்துகிறது?
ரிஷப் பண்ட் பிசிசிஐ உடன் ஒப்பந்த்தில் உள்ள ஒரு கிரிக்கெட் வீரர். அவர் ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் பெறுகிறார். இந்த ஒப்பந்தத் தொகையை பிசிசிஐ முழுமையாக செலுத்தும்.
பண்ட்டை ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணி 16 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது அவர் காயம் அடைந்து ஐபிஎல்லில் விளையாடாததால், அவரது ஐபிஎல் சம்பளத்தை முழுமையாக செலுத்தும் பொறுப்பை பிசிசிஐ ஏற்கும்.
பிசிசிஐ உடன் ஒப்பந்த்தில் இருக்கும் அனைத்து வீரர்களும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐயின் விதிமுறைகளின்படி, காயம் காரணமாக இந்த வீரர்கள் ஐபிஎல் தொடரை இழக்கும் பட்சத்தில் வாரியத்தால் முழு ஊதியம் பெறுவார்கள். சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்ல, ஆனால் காப்பீட்டு நிறுவனம் முழு தொகையும் செலுத்தும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil