India vs Sri Lanka 3rd ODI - Virat Kohli vs Shreyas Iyer Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணமாக வந்த இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடர் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நேற்று ஞாயிற்று கிழமை திருவனந்தபுரத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது.
இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 116 ரன்களும், ரோகித் சர்மா 42 ரன்களும் எடுத்தனர். தனது மிகச் சிறப்பான ஆட்டத்தால் மிரட்டி எடுத்த விராட் கோலி சதம் விளாசி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர்.
இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்கமால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், அந்த அணி 73 ரன்னில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தில் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் என 166 ரன்கள் விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், தொடரில் 283 ரன்கள் குவித்த கோலிக்கு தொடரின் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ஆஃப் ஸ்பின்னில் மிரட்டிய ஷ்ரேயாஸ்… ஆச்சரியத்தில் மூழ்கிய கோலி - வீடியோ
இந்த ஆட்டத்தில் 18வது ஓவரை வீச ஷ்ரேயாஸ் ஐயர் வந்தார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் தனது முதல் பந்தை வீச தயாராக இருந்தார். அப்போது ஸ்ட்ரைக்கில் இலங்கையின் இடது கை பேட்ஸ்மேனாக லஹிரு குமார நின்றார். தனது முதல் பந்தை ஷ்ரேயாஸ் வீச பந்து பேட்ஸ்மேனின் அருகில் பிட்ச்சாகி ஆஃப் சைடில் கட் ஆனது. அந்த பந்தை கீப்பர் ராகுல் லாவகமாக பிடித்தார்.
ஷ்ரேயாஸ் வீசிய பந்து அற்புதமாக ஆஃப் சைடில் சுழன்றதை கண்ட கோலி ஆச்சரியத்தில் முழ்கியவாறு வாயில் கையை வைத்தார். மேலும், அந்த பந்து எப்படி சுழன்று வந்தது என்பது குறித்தும் ராகுலிடம் பேசினார். இந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“