Shreyas Iyer receives a stroke of luck after bails fail to dislodge Tamil News: வங்கதேசத்தில் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்னிலும், சுப்மான் கில் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த புஜாரா நிலைத்து நின்று ஆட விராட் கோலி 1 ரன்னிலும், ரிஷப் பண்ட் 46 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். பிறகு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் புஜாராவுடன் சிறப்பான ஜோடி அமைத்தார். இந்த ஜோடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளை விரட்டி 90 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து வந்த அக்சர் படேல் (14), முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர இருந்த நிலையில், 90 வது ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். இறுதியில், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்துள்ளது இந்தியா. 82 ரன்களுடன் ஷ்ரேயாஸ் களத்தில் உள்ளார்.
ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட் இல்லை… ஸ்ரேயாசுக்கு அடித்த லக்…
இந்த ஆட்டத்தில் 83 வது ஓவரை வங்கதேசத்தின் எபடோட் ஹொசைன் வீசினார். அவர் வீசிய 3வது பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்டார். ஆடுகளத்தில் ஷார்ட்-பிட்ச் ஆகி சென்ற அந்த பந்து ஸ்ரேயாசுக்கு வலதுபுறத்தில் இருந்த ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஆனால், அவுட் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், அந்த ஸ்டம்புக்கு மேல் இருந்த பெயில் கீழே விழவில்லை.
ஐசிசி-யின் விதிப்படி, ஒரு வீரர் போல்ட்-அவுட் செய்யப்படும் போது பெயில்கள் கீழே விழ வேண்டும். ஆனால் ஸ்ரேயாசுக்கோ அவை கீழே விழாமல் ஸ்டம்ப்பில் தொட்டவாரே இருந்தன. இதனால் அவர் அவுட் என அறிவிக்கப்படவில்லை. 'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று' என்ற பழமொழி ஏற்ப, ஸ்டம்ப்பை பதம் பார்த்த அந்த பந்து பெயிலை மட்டும் விட்டுச் சென்றுவிட்டது.
தற்போது இந்த வீடியோவை டெஸ்ட் போட்டியை ஒளிபரப்பும் 'சோனி' தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil