Venkatesh Iyer plays cricket with Kanchipuram Veda Pathshala students Tamil News: ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருபவர் வெங்கடேஷ் ஐயர். உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்திய பிரதேசம் அணிக்காக விளையாடும் இவரை கடந்த 2021 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக தனது முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்து மிரட்டினார். மேலும் 320 ரன்கள் வரை குவித்த அவர் தனது அணி இறுதிப்போட்டி வரை முன்னேற பெரிதும் உதவினார். இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அரைசதம் அடித்த போதும் அவரது அணி தோல்வியைத் தழுவியது.
Advertisment
தொடக்க சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெங்கடேஷ் ஐயர் அனைவரும் கவர்ந்த நிலையில், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்கள் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து அவரால் விளையாட முடியவில்லை. நடப்பு ஐ.பி.எல் சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 404 ரன்கள் அடித்து இருந்தார். இதில் ஒரு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். மேலும், 21 சிக்ஸர்களை இந்த தொடரில் விளாசிய வெங்கடேஷ் ஐயர் ஸ்டிரைக் ரைட்டை 145 என்று அளவில் வைத்திருந்தார்.
Advertisment
Advertisements
காஞ்சிபுரம் கோவில் வளாகத்தில் கிரிக்கெட்
இந்த நிலையில், ஐ.பி.எல் தொடரை முடித்த கையோடு வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கராச்சாரியார் மடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பயின்று வரும் குருகுல மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார் வெங்கடேஷ் ஐயர். அவர் மாணவர்கள் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசினார். வழக்கம் போல் பந்துகளை தனது பாணியில் லெக் சைடில் சிக்ஸருக்கு பறக்க விட்டு அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை வெங்கடேஷ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோவின் கேப்டசனில் வெங்கடேஷ் ஐயர், “கிரிக்கெட் விளையாட்டின் மீதான காதல் நம்பமுடியாதது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து இளம் வேத பாடசாலை மாணவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் கழித்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெங்கடேஷ் ஐயர் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு கலவையான விமர்சனம் வந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் 'கடவுளை வணங்கும் இடமான கோயிலில் வெங்கடேஷ் ஐயர் எப்படி கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டது' என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், சிலர் அவர் மீது எந்த தவறு இல்லை என்று கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'அது அரசு நிர்வகிக்கும் கோயில் கிடையாது', காஞ்சி மடத்தினுடைய தனிப்பட்ட சொத்து' என்றும் கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil