8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது டி.என்.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் அரங்கேறி வருகிறது. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. மறுபுறம், நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாசை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது. தற்போது இரு அணிகளும் 2-வது வெற்றிக்கு வரிந்து காட்டுவார்கள் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த டி.என்.பி.எல் தொடரில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து, சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியின் ஆஷிக் கலீல் ரெஹ்மான் மற்றும் ஆர்.எஸ். மோகித் ஹரிஹரன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஆர்.எஸ். மோகித் ஹரிஹரன் 2 ரன்கள் மட்டுமே எடுத்து, சோனு யாதவ் பந்தில் ரித்திக் ஈஸ்வரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பாபா அபராஜித், ஆஷிக் கலீல் ரெஹ்மான் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபராஜித் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சச்சின் ரதி பந்தில், பி செரியனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நாராயன் ஜெகதீசன் பேட்டிங் செய்ய வந்தார்.
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது, அரைசதம் அடித்திருந்த ஆஷிக் கலீல் ரெஹ்மான் 54 ரன்களில், வள்ளியப்பன் யுதீஸ்வரன் பந்தில் ரிஷீக் குமார் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து விஜய் சங்கர் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், நாராயண் ஜெகதீசன் 13 ரன்களில் சோனு யாதவ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்வப்னில் சிங், விஜய் சங்கர் உடன் ஜோடி சேர்ந்தார்.
சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 13.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது, 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்வப்னில் சிங், வள்ளியப்பன் யுதீஸ்வரன் பந்தில் ரித்த்க் ஈஸ்வரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அபிஷேக் தன்வார், வள்ளியப்பன் யுதீஸ்வரன் வீசிய பந்தில் கோல்டன் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் ராஜ் 1 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். விஜய் சங்கர் 24 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங் செய்தது.
சேப்பாக் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நெல்லை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுக்க, மறுபுறம் அணியின் கேப்டன் அருண் கார்த்திக் நிலைத்து நின்று ஆடினார்.
பின்னர் அருண் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த முகமது அட்னான் கான் வேகமாக ரன்களை சேர்க்க நெல்லை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருப்பினும், அருண் கார்த்திக் 52 (41) ரன்களிலும், முகமது அட்னான் கான் 48 (27) ரன்களிலும் அவுட்டாகினர். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது.
நெல்லை தரப்பில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 52 (41) ரன்கள் எடுத்தார். சேப்பாக் தரப்பில் அபாரமாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.