CSK Announce Junior Super Kings inter-school T20 tournament Tamil News: 7வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கிடையேயான டி20 போட்டி தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் ஜனவரி 22, 2023 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘கிங்ஸ் அகாடமி’ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்துகின்றன. இதற்கான ஜெர்சி மற்றும் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.
The Seventh Edition of Junior Super Kings is underway!
— Chennai Super Kings (@ChennaiIPL) December 20, 2022
Watch the academy space for all the live action from Dec 26 – Jan 22! 🥳#TheRoarStartsHerepic.twitter.com/qX00OSOF6S
போட்டியின் சிறப்பம்சங்கள்
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 தொடரில் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் 86 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்தப் போட்டி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் (டிசம்பர் 26 முதல் ஜனவரி 10 வரை) சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நாக் அவுட் முறையில் விளையாடப்படும்.
சென்னையில் இருந்து இரண்டு அணிகள் (வின்னர்ஸ் மற்றும் ரன்னர்ஸ்) மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 6 வெற்றியாளர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 22 வரை திருநெல்வேலியில் இரண்டாம் கட்டமாக விளையாடுவார்கள். இரண்டாவது கட்டம் லீக் முறையில் நடைபெறும். இறுதிப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
சூப்பர் கிங்ஸ் அகாடமியின் டிஜிட்டல் தளங்களில் போட்டிகள் ஒளிபரப்பப்படும்.
சென்னையில் நடைபெறும் போட்டிகள் மற்றும் இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான தங்கும் விடுதி மற்றும் தங்கும் வசதிகளை சம்பந்தப்பட்ட இடங்களில் கவனித்துக் கொள்ளும்.
அனைத்து வீரர்களுக்கும் ஜெர்சி மற்றும் தொப்பிகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்படும். சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன், போட்டியின் சிறந்த வீரர் மற்றும் இறுதி ஆட்டக்காரர் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
இது தொடர்பாக பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், “ஜூனியர் சூப்பர் கிங்ஸ் முதன்முதலில் 2012ல் சென்னையில் 32 அணிகள் பங்கேற்கும் போட்டியாக தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, இது மாநிலம் முழுவதும் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் ஒரு தமிழ்நாடு போட்டியாக வளர்ந்துள்ளது. கோவிட் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு போட்டி மீண்டும் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதுமே விளையாட்டுக்குத் திரும்பக் கொடுப்பதை நம்புகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் அடிமட்ட கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான எங்கள் திட்டங்களில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் ஒரு முக்கிய பகுதியாகும். ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்ஷன் போன்ற வீரர்களுக்கு இந்த போட்டி தளத்தை வழங்கியுள்ளது. இந்த ஆண்டும் பல எதிர்கால நட்சத்திரங்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஜூனியர் சூப்பர் கிங்ஸ் ஒரு சிறந்த வாய்ப்பு. பெரிய கனவு காண்பதுதான் வீரர்களுக்கு எனது செய்தி. போட்டியில் சிறப்பாக விளையாடி, சி.எஸ்.கே அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அடுத்த வீரராக வேண்டும். போட்டியை கடினமாக விளையாடுங்கள். ஆனால் எம்எஸ் தோனி எப்போதும் சொல்வது போல், உங்கள் முகத்தில் புன்னகையுடன் விளையாடுங்கள். நான் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil