2018ல் நடைபெற்று வரும் ஐபிஎல் 23-வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று களத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய பெங்களூரு அணி முதலில் பேட்டிங். தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சர்துல் தாகூர் வீசிய பந்தில் ஜடேஜாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.
போட்டி தொடங்கியதில் இருந்தே சென்னை அணியினரின் பந்துவீச்சில் ஒரு கை பார்த்தனர். டிவில்லியர்ஸ் ஒரு புறம் பந்தை விளாசித் தள்ள, மறுபுறம் டி காக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிப்படியாக ஆட்டம் சூடு பிடிக்க, இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. வாட்சன் மற்றும் ராயுடு தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர். ஆனால் 7 ரன்களிலேயே நெகி வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை ரசிகர்களில் பதற்றம் அதிகரித்தது. இவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 11 ரன்கள் எடுத்த நிலையிலும், பில்லிங்ஸ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 3 ரன்களில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாகக் களமிறங்கினார் சென்னை அணியின் தல தோனி. முதலில் தோனி - ராயுடு ஜோடி நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி வெற்றி இலக்கைத் துரத்தினர். ராயுடு 82 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக தோனியுடன் ஜோடி சேர்ந்தார் பிராவோ.
சென்னை அணி கேப்டன் தோனி பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்க ஆரம்பித்தார். கடைசி ஓவர் பரபரப்பில் தனக்கே உண்டான முறையில் சிக்சர் அடித்து சென்னை அணியை வெற்றி அடையச்செய்தார் தோனி. அதன்படி 19.4 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.