Shivam Dube | IPL 2024 | Chennai Super Kings: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு மும்பை நடந்த ஆட்டத்தில் 5 முறை சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
சி.எஸ்.கே பவுலிங் கோச் புகழாரம்
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு வாண வேடிக்கை காட்டி இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சிவம் துபே. அவருக்கு எதிராக ஸ்பின் பவுலிங் போட அணிகள் நடுங்குகின்றன என்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/e86fe925-d29.jpg)
நேற்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் சென்னை அணிக்கு எதிராக 7 பந்துவீச்சு விருப்பங்களைப் பயன்படுத்தியது. ஆனால், 8-வது ஓவருக்குப் பிறகு, அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களைத் தொடர விரும்பவில்லை. அந்த 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். அவரின் ஒரே ஒரு பந்தை மட்டுமே துபே எதிர்கொண்டார். மொத்தமாக 38 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி (சிக்ஸர் விளாசுவதால்) என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிவம் துபே, போட்டிகளைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர் என்றும், அவருக்கு எதிராக ஸ்பின் வீச அணிகள் நடுக்குங்குகின்றன என்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "அவர் (துபே) பேட்டிங் செய்ய வரும்போது, அவர்கள் (எதிரணிகள்) சுழற்பந்து வீச்சாளர்களை கழற்றி விடுகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வருகிறார்கள். அதிலும் அவர் திறம்பட்டவராகிவிட்டார். அவர் களத்தில் இருக்கும் வரை, அவர்கள் மீதி ஆட்டத்தில் மீண்டும் ஸ்பின் பந்து வீசவில்லை.
போட்டியை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது மிக முக்கியம். அவரைப் போன்ற ஒருவரால் அதைக் கட்டுப்படுத்த முடியும், ஏனென்றால் அவர்களால் பந்து ஸ்பின் வீச முடியாது. அவர்கள் அதனை விரும்பவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திறம்பட செயல்படும் அவரது திறன் மிகப்பெரியதாகிவிட்டது. அவருக்கு அது மிகப் பெரிய சொத்தாகும்.
அவர் எக்ஸ்ட்ரா கவர் மூலம் ஒரு கவர் டிரைவ் அடித்தார். பேட்டின் சுழற்றலில் பந்துகளை பறக்கவிட்டார். அவர் பந்தை அடிக்கும் டைமிங்கை மக்கள் பாராட்ட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவரிடம் பவர் ஃபுல்லான சக்தி உள்ளது. ஆனால் அவரது டைமிங் மிகச்சிறப்பானதாக உள்ளது.
சிவம் துபேயின் பார்வையில், அவர் விளையாடுவது போல் விளையாட, முதலில் ரிஸ்க் எடுக்க வேண்டும். சிறிது காலம் அவர் தனக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஒருவரை வளர அனுமதிப்பது, யாரையாவது பாதுகாப்பாக உணர அனுமதிப்பது, தவறுகள் செய்வது மற்றும் சிறந்தவராக மாற அனுமதிப்பது அதன் ஒரு முக்கிய பகுதியாகும், அதுதான் அவருக்கு நடந்தது," என்று பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“